
முதல் டெஸ்ட் போட்டி
போட்டி ஒருபுறம் சிறப்பாக சென்றுக்கொண்டிருக்க இங்கிலாந்து - இந்தியா வீரர்களுக்கு இடையேயான மோதல் அதிகரித்துள்ளது. குறிப்பாக இங்கிலாந்தின் சீனியர் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், முதல் டெஸ்ட் போட்டியில் இருந்தே இந்திய அணியில் ஒவ்வொரு வீரராக சீண்டி வம்பிழுத்து வருகிறார்.

என்ன காரணம்
நாட்டிங்கமில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சார்பாக சிராஜ் பேட்டிங் செய்துகொண்டிருந்த போது இங்கிலாந்து பவுலர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சீண்டலில் ஈடுபட்டார். சிராஜ் நீண்ட நேரமாக சிறப்பாக பேட்டிங் செய்து வந்ததால், அவரை திசைத் திருப்புவதற்காக சிராஜின் மீது வேண்டுமென்றே மோதி பலத்தை காட்டிச் சென்றார்.

ஜஸ்பிரித் பும்ரா
இவரின் இந்த மோசமான செயல் 2வது டெஸ்ட் போட்டியிலும் தொடர்ந்து வருகிறது. நேற்றைய போட்டியின் போது, இந்திய அணியில் மிகவும் பொறுமைசாலியாக பார்க்கப்படும் ஜஸ்பிரித் பும்ராவிடமே சண்டைக்கு சென்றார். ஆண்டர்சன் பேட்டிங் செய்துக்கொண்டிருக்கும் போது, அவரை விரைவில் விக்கெட் எடுக்க, பும்ரா தொடர்ந்து பவுன்சர் பந்துகளாக வீசினார். அவை அவரின் உடலை பதம் பார்த்தது. இதனால் கோபமடைந்த ஆண்டர்சன், போட்டி முடிந்தவுடன் பும்ராவிடம் கடுமையான வார்த்தைகளை உதிர்த்தார்.

கோலியிடம் சீண்டல்
இந்நிலையில் இந்தியாவின் இளம் படையை சீண்டி வந்த ஆண்டர்சன், தற்போது நேரடியாக கேப்டன் விராட் கோலியையே கடுப்பாக்கியுள்ளார். விராட் கோலி வழக்கமாக ஆட்டத்தின் போது ஆக்ரோஷமாக இருப்பார். அடிக்கடி கடுமையான வார்த்தைகளை கூறி சண்டைக்கு செல்லும் வீடியோக்கள் வைரலாகும், ஆனால் தற்போதெல்லாம் அவரின் செயல்பாடுகளில் மிகவும் பொறுமை தெரிகிறது. எவ்வளவு பெரிய விஷயம் நடந்தாலும், நிதானமாக கையாள்கிறார். ஆனால் அவரே மீண்டும் பழைய ஃபார்முக்கு சென்றுள்ளார்.

இந்தியாவுக்கு சரிவு
2வது டெஸ்ட் போட்டியின் 4ம் நாளான இன்று தொடக்கத்திலேயே 2 விக்கெட்கள் சரிந்தது. இதனால் விராட் கோலி பொறுமையாக ஆடி வந்தார். ஆட்டத்தின் 17வது ஓவரை ஆண்டர்சன் வீச, புஜாரா பேட்டிங் திசையில் இருந்தார். கோலி மறுமுணையில் நின்றுக்கொண்டிருந்தார். அவர்கள் ரன் ஓடலாம் என நினைத்த போது ஆண்டர்சன், பிட்ச்-ன் குறுக்கே நடந்துச்சென்றுக் கொண்டிருந்தார்.

கோலி உதிர்த்த வார்த்தைகள்
அவரின் இந்த செயல் கோலியை சூடாக்கியது. இதனையடுத்து ஆண்டர்சனை நோக்கி, " "இது போட்டியின் பிட்ச் ஆண்டர்சன், உங்கள் வீட்டு தோட்டம் கிடையாது, குறுக்கே நடந்துக்கொண்டிருப்பதற்கு" என தெரிவித்தார். அவரின் இந்த பேச்சு நடுவரின் மைக்கின் மூலம் தெரியவந்தது. ஆனால் ஆண்டர்சன் எந்தவித பதிலும் தெரிவிக்கவில்லை.

கோலி ஏமாற்றம்
இதே கோபத்துடன் விராட் கோலி சதமடித்து இந்திய அணிக்கு நல்ல ஸ்கோர் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 20 ரன்னில் வெளியேறி ஏமாற்றினார். சாம் கரண் வீசிய 24 ஓவரில் கேட்ச்சானார். இதனால் 55 ரன்களுக்குள் 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது.


Click it and Unblock the Notifications











