பிர்மிங்காம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், மூன்றாவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடத் துவங்கி இருந்தது. அப்போது யஷஸ்வி ஜெய்ஸ்வால் கேட்ட டிஆர்எஸ் (DRS) ரிவ்யூ சர்ச்சையாக மாறியது.
இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 587 ரன்களும், இங்கிலாந்து அணி 407 ரன்களும் எடுத்து இருந்தன. மூன்றாவது நாள் அன்று இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸ் ஆடத் துவங்கியது. ஜெய்ஸ்வால் மற்றும் கே எல் ராகுல் துவக்கம் அளித்தனர். அப்போது ஜோஷ் டங் வீசிய பந்து ஜெய்ஸ்வாலின் காலில் பட்டது. இங்கிலாந்து வீரர்கள் அவுட் என முறையிட்டனர்.

களத்தில் இருந்த அம்பயர் எல்பிடபிள்யூ (LBW) முறையில் அவுட் என அறிவித்தார். அப்போது ரிவ்யூ கேட்பதற்கான கால அவகாசம் இருந்தது. அந்த நேரத்தில் ஜெய்ஸ்வால், கே.எல். ராகுலுடன் ஆலோசனை செய்து ரிவ்யூ கேட்பதாக முடிவு எடுத்து அறிவித்தார். ஆனால், இதற்கு அவர் நீண்ட நேரம் எடுத்துக் கொண்டதாக சர்ச்சை எழுந்தது.
ரிவ்யூ கேட்பதற்கு 15 வினாடிகள் மட்டுமே அளிக்கப்படும். ஆனால், ஜெய்ஸ்வால் அந்த நேரம் முடிந்தபின் தான் ரிவ்யூ கேட்பதாக அறிவித்ததாக இங்கிலாந்தின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கோபமடைந்தார். அவர் இதுகுறித்து ஜெய்ஸ்வாலிடம் காரசாரமாகப் பேசியதுடன், அம்பயரிடமும் இதை ஏற்கக் கூடாது எனத் தெரிவித்தார்.
ஆனால், அதற்கு முன்பே அம்பயர் மூன்றாவது அம்பையருக்கு சைகை செய்துவிட்டார். இதை அடுத்து அந்த ரிவ்யூவும் ஏற்கப்பட்டது. இதற்கிடையே ஜெய்ஸ்வால் - ஸ்டோக்ஸ் வாக்குவாதம் செய்தனர். அம்பயர் தடுக்க முடியாமல் நின்ற நிலையில் கே எல் ராகுல், ஸ்டோக்ஸ்-இடம் இந்திய அணி தரப்பு நியாயத்தை முன் வைத்தார்.
அப்போது திரையில் காட்டப்பட்ட ரீப்ளே-வில் பந்து 'லெக் ஸ்டம்ப்பை' நோக்கிச் சென்று தகர்ப்பது தெரிய வந்தது. விதிப்படி, ஆஃப் ஸ்டம்ப் அல்லது மிடில் ஸ்டம்பில் பட்டால் மட்டுமே எல்பிடபிள்யூ முறையில் அவுட் கொடுக்கப்படும். அந்த வகையில் ஜெய்ஸ்வால் அவுட் இல்லை என அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து மைதானத்தில் இருந்த இங்கிலாந்து ரசிகர்கள் இந்திய அணிக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு எழுந்தது.
மூன்றாவது நாள் ஆட்ட நேரம் முடிவில் இந்திய அணி 64 ரன்களுக்கு ஒரு விக்கெட் இழந்து இருந்தது. ஜெய்ஸ்வால் 28 ரன்களில் ஆட்டமிழந்து இருந்தார். கே.எல். ராகுல் மற்றும் கருண் நாயர் ஆடுகளத்தில் உள்ளனர்.