லண்டன்: இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று (ஆக.12) நடைபெறுகிறது.
நாட்டிங்கமில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் கடைசி நாள், மழையால் முற்றிலும் பாதிக்க்கப்பட, ஆட்டம் முடிவின்றி டிரா ஆனது. இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்த நிலையில், மழை அந்த வாய்ப்பை தட்டிப்பறித்தது.

இந்நிலையில், இன்று புகழ்மிக்க லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 2வது டெஸ்ட் மேட்ச் தொடங்குகிறது. முதல் போட்டியில் விளையாடிய வேகப்பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்கூர் காயம் காரணமாக இந்த போட்டியில் இருந்து விலகுவதாக கேப்டன் விராட் கோலி அறிவித்துள்ளார். இதனால், ஷர்துலுக்கு பதிலாக அணியில் இடம் பிடிக்கப் போவது யார்? என்ற பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. சீனியர் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா காயத்தில் இருந்து 100 சதவிகிதம் குணமடைந்துவிட்டால் அவருக்கு இந்த போட்டியில் விளையாட நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என்பது உறுதி. ஒருவேளை அவரும் முழு உடற்தகுதி பெறவில்லை எனில், ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம், வானிலையைப் பொறுத்தவரை, 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், Accuweather படி, அதிகபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் முதல் நாளில் மழை பெய்ய வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.