
பும்ரா - ஷமி
இங்கிலாந்து போன்ற கடினமான களத்தில் முன்னணி பேட்ஸ்மேன்களே ரன் எடுக்க திணறுகின்றனர். அப்படி இருக்கையில் பும்ரா மற்றும் ஷமி சிறிது நேரம் நின்றுவிட்டு விக்கெட்டை பறிகொடுத்திருப்பார்கள். ஆனால் இங்கிலாந்து வீரர்கள் வேண்டுமென்றே விக்கெட் எடுக்க முற்படாமல் பும்ராவை தாக்கும் வகையில் பந்துகளை வீசினர். இதுமட்டுமின்றி ஒவ்வொரு ஓவருக்கும் இடையே பும்ராவிடம் வம்பிழுத்தனர்.

காரணம்
இந்த டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில், இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, அந்த அணியின் சீனியர் பவுலர் ஜேம்ஸ் ஆண்டர்சன் பேட்டிங் செய்ய வந்த போது, இந்தியாவின் பும்ரா ஒரே ஓவரில் தொடர்ந்து பவுன்சர் பந்துகள் போட்டு தாக்குதல் நடத்தினர். இதில் ஆண்டர்சன் ஹெல்மெட், தோள்பட்டை, கால் என அனைத்து இடங்களிலும் தாறுமாறாக அடி வாங்கினார். பும்ரா வேண்டுமென்றே பவுன்சர் போட்டதாக நினைத்து கடுப்பான ஆண்டர்சன் பழிவாங்குவதற்காகவே தனது அணியினருடன் இன்று ஆட்டத்தில் அப்படி நடந்துக்கொண்டனர்.

விணை தேடிக்கொண்ட இங்கிலாந்து
இது அவர்களின் திட்டம், சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட கதையை போல ஆகிவிட்டது. இங்கிலாந்து வீரர்களின் பந்துவீச்சை நன்கு புரிந்துக் கொண்ட முகமது ஷமி - பும்ரா ஜோடி பவுண்டரி, சிக்ஸர் என பேட்டை சுழற்றினர். இருவரும் சுதாரித்துக் கொண்டு காட்டிய அதிரடியால் 9வது விக்கெட்டிற்கு இந்த ஜோடி 77 ரன்களை குவித்தது. முகமது ஷமி 56 ரன்களும், ஜஸ்பிரித் பும்ரா 34 ரன்களும் விளாசினர். இதனால் 220 க்குள் முடியவேண்டிய இந்திய அணியின் ஸ்கோர் 298 ரன்களுக்கு சென்றது. அதிலும் விராட் கோலி டிக்ளர் செய்துவிட்டார். இல்லையென்றால் 300 ரன்களை கடந்திருக்கும்.

திணறல்
கடைசி நாள் ஆட்டத்தில் முதல் செஷன் முடிவடைந்தது. மீதமுள்ள நாளில் 272 ரன்களை அடிக்க இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இவ்வளவு பெரிய ஸ்கோரை ஒரே நாளில் அடிக்க வேண்டும் என்றால் அதிரடியாக ஆடியே தீர வேண்டும். எனவே அதன்படி அதிரடி காட்ட முயன்ற இங்கிலாந்து அணி அடித்தடுத்து விக்கெட்டுகளை இழந்து மோசமான தோல்வியை பெற்றது.

மைக்கேல் வாகன் அதிருப்தி
இந்நிலையில் இங்கிலாந்தின் தோல்வி குறித்து அந்நாட்டின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் அதிருப்தி தெரிவித்துள்ளார். 2வது இன்னிங்ஸின் போது ரிஷப் பண்ட்-ஐ விட ஜஸ்பிரித் பும்ராவுக்கு பவுண்டரி எல்லையில் அதிக ஃபீல்டிர்கள் நிற்க வைக்கப்பட்டார்கள். இது எப்படி நடந்தது. 100 டெஸ்ட் போட்டிகளுக்கும் மேலாக விளையாடிய அனுபவம் உள்ள ஜோ ரூட், ஜேம்ஸ் ஆண்டர்சன் போன்ற வீரர்கள் என்ன செய்துக் கொண்டிருந்தனர். அவர்கள் இருந்த போதும் கூட எப்படி இந்த நிலை வந்தது. அவர்களின் திட்டம் முற்றிலும் சரியாக இல்லை. அனைத்தும் மோசமாக சொதப்பியுள்ளது.

தோல்வி தொடங்கியது
இங்கிலாந்து ஃபீல்டர்கள் மைதானத்தின் அனைத்து திசையிலும் நிற்கிறார்கள். அவர்கள் என்னதான் நினைத்துக் கொண்டிருந்தார்கள் என்பது எனக்கு புரியவில்லை. பிரஷர் சூழலில் இருக்கும் போது, மிகவும் எளிமையான திட்டங்களை செயல்படுத்துவதே சிறந்தது. ஆனால் பும்ரா, ஷமி போன்ற டெயில் எண்டர்ஸ்களுக்கு ஸ்டம்புகளை நோக்கி பந்து வீசப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதனைவிட்டுவிட்டு ஷார்ட் பால், வைட் லெந்த்-ல் போட்டு வீணாக்கி விட்டீர்கள்.

இனி அவ்வளவு தான்
இந்திய வீரர்களை, போட்டியின் போது இங்கிலாந்து வீரர்கள் சீண்டியது தப்பாகிவிட்டது. பும்ரா, ஷமி இருவரையும் சீண்டி உசுப்பேற்றியதால், அவர்கள் பெரிய ஸ்கோர் அடித்தார்கள். இனி வரும் போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெறுவது எளிதல்ல. மிகவும் போராடியாக வேண்டும். அதற்கும் வாய்ப்புகள் மிக குறைவு. இந்திய வீரர்களை உசுப்பேற்றிவிட்டதால், அவர்கள் வெற்றிபெற தீவிரமாகப் போராடுவார்கள். இங்கிலாந்து அணியில் தற்போது சில பேட்ஸ்மேன்கள் நல்ல பார்மில் இல்லை என்பதால், இந்திய அணிக்கே வெற்றிகள் கிடைக்கும் என வாகன் தெரிவித்துள்ளார்.

கம்பேக் கொடுக்குமா இங்கிலாந்து
இங்கிலாந்து அணியின் திட்டம் மிக மோசமாக இருந்தது என்று கேப்டன் ஜோ ரூட்டே ஒப்புக்கொண்டுள்ளார். எனினும் 2வது டெஸ்ட் போட்டியில் செய்த தவறுகளை திருத்திக்கொண்டு அடுத்து வரும் 3 டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்து கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











