பிர்மிங்காம்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோத உள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில், அதிரடியாக இரண்டு புதிய வீரர்கள் சேர்க்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, நிதீஷ் குமார் ரெட்டி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இந்திய அணியில் சேர்க்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே, சாய் சுதர்சன் பிளேயிங் லெவனில் இருக்கும் நிலையில் இரண்டாவது தமிழக வீரராக வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்குப் பதிலாக தமிழக வீரர் ஆல் ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட உள்ளதாகத் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

அதேபோல, ஆல்ரவுண்டர் என்ற அடையாளத்துடன் இந்திய அணியில் முந்தைய போட்டியில் விளையாடிய ஷர்துல் தாக்கூர் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக பேட்டிங் செய்யும் திறனுடைய நிதீஷ் குமார் ரெட்டி இந்திய அணியில் சேர்க்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட தோல்வி காரணமாக இந்த மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.
இதில் ஒரு குழப்பமும் உள்ளது. பேட்டிங்கை பலப்படுத்தும் வகையில்தான் நிதீஷ் குமார் ரெட்டி மற்றும் வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்பட்டு இருக்கின்றனர். அப்படி என்றால், பந்துவீச்சு நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில், முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாததால் தான் தோல்வி ஏற்பட்டது.
ஜஸ்பிரித் பும்ரா மட்டுமே பந்துவீச்சை வழிநடத்தினார். அவருக்கு இணையாக பந்து வீசுவதற்கு சரியான பவுலர்கள் இல்லை. அனுபவம் வாய்ந்த முகமது சிராஜும் ஏமாற்றம் அளித்தார். இந்த நிலையில், பந்துவீச்சில் பெரிய அளவில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கூடுதலாக இரண்டு ஆல் ரவுண்டர்களை சேர்த்து இருக்கிறார் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர்.
இது இந்திய அணிக்கு உதவுமா? இதன் மூலம் இந்திய அணி அதிக ரன் சேர்த்து வெற்றி பெற நினைக்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில், இந்திய அணியின் பந்துவீச்சால் இனி பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என்ற எண்ணத்தில் தான் பேட்டிங்கை மட்டும் பலப்படுத்துவோம் என்ற முடிவுக்கு கௌதம் கம்பீர் வந்து இருக்கிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த மைதானத்தில் இந்திய அணி இதுவரை ஒரு வெற்றி கூட பெற்றதில்லை. இதுவரை விளையாடிய எட்டு போட்டிகளில் ஏழு தோல்விகள் மற்றும் ஒரு டிரா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.