விசாகப்பட்டினம் : இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு காரணம், இந்திய சுழற் பந்துவீச்சாளர்களை அந்த அணி குறைவாக எடை போட்டது தான்.
குறிப்பாக, இந்தப் போட்டியில் அஸ்வின் முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட் கூட எடுக்காத நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் அவர் பந்துவீச்சில் எளிதாக ரன் குவிக்கலாம் என தப்புக் கணக்கு போட்டது இங்கிலாந்து அணி. அதுவே அந்த அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

இங்கிலாந்து அணி பேஸ்பால் (Bazball) என்ற அதிரடி பாணி கிரிக்கெட்டை ஆடி வருகிறது. பேட்டிங், பவுலிங் என எல்லாமே அதிரடி தான். எதிலுமே தடுப்பாட்டம் என்பதே இல்லை. அதன்படி வெறும் தாக்குதல் பாணி ஆட்டம் மட்டுமே ஆட வேண்டும் என்பதையே கொள்கையாக கொண்டு இங்கிலாந்து அணி டெஸ்ட் போட்டிகளில் ஆடி வருகிறது.
இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இதே போலவே ஆடி அந்த அணி வெற்றியும் பெற்றது. அதே போல, இரண்டாவது டெஸ்ட்டிலும் வெற்றி பெறலாம் என இங்கிலாந்து அணி திட்டமிட்டது. இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு 399 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம் செய்த நிலையில், இங்கிலாந்து அணி மூன்றாம் நாள் முடிவில் 67 ரன்களுக்கு 1 விக்கெட் இழந்து இருந்தது.
அந்த நாளின் முடிவில் பேசிய இங்கிலாந்து அணியின் மூத்த வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன், இங்கிலாந்து அணி நான்காம் நாள் ஆட்டத்தில் 60 - 70 ஓவர்களில் எல்லாம் இலக்கை எட்ட முயற்சி செய்யும் எனக் கூறி இருந்தார். பொதுவாக 399 ரன்கள் என்ற இலக்கை எட்டுவது டெஸ்ட் போட்டிகளில் மிகக் கடினமான ஒன்று. அதிலும் நான்காம் நாள் ஆட்டத்தில் பிட்ச் சமநிலையை இழந்து இருக்கும் போது வேகமாக ரன் குவிப்பது என்பது அதை விட கடினமானது.
ஆனால், முதல் இன்னிங்ஸில் இந்திய சுழற் பந்துவீச்சாளர்களின் ஓவர்களில் இங்கிலாந்து அணி சராசரியாக 5 ரன்கள் குவித்து இருந்தது. அஸ்வின் அப்போது விக்கெட் எடுக்கவில்லை. இதை அடுத்து இந்திய சுழற் பந்துவீச்சை குறைத்து எடை போட்ட இங்கிலாந்து அணி, அஸ்வின் பந்துவீச்சில் வெளுத்துக் கட்டலாம். அதே போல, சுழற் பந்துவீச்சாளர்கள் ஓவர்களில் எல்லாம் ஓவருக்கு 4 - 5 ரன்கள் எளிதாக எடுக்கலாம் என கணக்கு போட்டே 60 - 70 ஓவர்களில் எல்லாம் இலக்கை எட்ட முயற்சி செய்வோம் என ஆண்டர்சன் கூறி இருந்தார்.
ஆனால், அவர்கள் எண்ணத்துக்கு மாறாக அஸ்வின் டாப் மற்றும் மிடில் ஆர்டரின் மூன்று விக்கெட்களை வீழ்த்தினார். அதன் பின் அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், பும்ரா வரிசையாக விக்கெட் வீழ்த்த இங்கிலாந்து அணியின் பகல் கனவு பலிக்காமல் போனது. நிதானமாக, குறிப்பிட்ட பந்துவீச்சாளர்களை மட்டும் குறி வைத்து ஆடி இருந்தால் அந்த அணி இலக்கை இன்னும் நெருங்கி இருக்கலாம். மாறாக பும்ராவை தவிர்த்து சுழற் பந்துவீச்சாளர்களின் ஓவர்களில் எல்லாம் ரன் குவிக்க முயற்சி செய்து விக்கெட்களை இழந்து 292 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. 106 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.