விசாகப்பட்டினம் : இந்திய டெஸ்ட் அணியில் கடந்த சில போட்டிகளில் சரியாக ரன் குவிக்காத பேட்ஸ்மேன்களை இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு இடையே உள்ளூர் டெஸ்ட் தொடரான ரஞ்சி ட்ராபியில் பங்கேற்குமாறு அறிவுறுத்தி இருக்கிறது பிசிசிஐ-இன் தேர்வுக் குழு. இதில் கேப்டன் ரோஹித் சர்மாவும் இடம் பெற்று இருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள நிலையில், பிசிசிஐ இந்த போட்டிக்கு முன் இப்படி கூறி இருப்பது தெரிய வந்துள்ளது. இரண்டாவது டெஸ்ட்டில் இந்தியா வெற்றி பெற்ற போதும் ஜெய்ஸ்வால், சுப்மன் கில் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை. குறிப்பாக கேப்டன் ரோஹித் சர்மா இரண்டு போட்டிகளிலும் பெரிதாக ரன் சேர்க்கவில்லை. எனவே, அவர் தற்போது ரஞ்சி ட்ராபி தொடரில் ஆடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்திய டெஸ்ட் அணியில் புஜாரா, அஜின்க்யா ரஹானே ஆகிய இரண்டு அனுபவ பேட்ஸ்மேன்களுக்கு இடம் அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விராட் கோலி முதல் இரண்டு போட்டிகளில் இருந்து விலகினார். பின்னர் முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்த கே எல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவில்லை.

இந்த நிலையில், இந்திய அணி வேறு வழியின்றி ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சுப்மன் கில்லை நம்பியே இருந்தது. முதல் டெஸ்ட்டில் ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்த நிலையில், அவரை விடுத்து மற்ற மூவரும் சரியாக ரன் குவிக்காததால் இரண்டாவது டெஸ்ட் முடிந்த உடன், மூன்றாவது டெஸ்ட் போட்டி துவங்கும் முன் உள்ள 9 நாள் இடைவெளியில் ரஞ்சி ட்ராபி தொடரில் பங்கேற்று தங்கள் பேட்டிங் ஃபார்மை மீட்குமாறு ரோஹித் சர்மா, ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சுப்மன்
கில்லுக்கு தேர்வுக் குழு அறிவுறுத்தியதாக கூறப்பட்டது.
ஆனால், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் சதம் அடித்து தன் பேட்டிங் ஃபார்மை நிரூபித்து விட்டார். ஆனால், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் 27 மற்றும் 29 ரன்கள் எடுத்தார். ரோஹித் சர்மா இன்னும் மோசமாக 14 மற்றும் 13 ரன்கள் எடுத்தார். இதை அடுத்து கேப்டனாக இருந்தாலும் சரி, உள்ளூர் டெஸ்டில் ஆடுமாறு ரோஹித் சர்மாவிடம் கூறி இருக்கிறது பிசிசிஐ-இன் தேர்வுக் குழு.
எனினும், மூத்த வீரர் என்ற அடிப்படையில் ரோஹித் சர்மா அந்த யோசனையை புறக்கணிக்கவும் வாய்ப்பு உள்ளது. ஆனால், ஸ்ரேயாஸ் ஐயர் நிச்சயம் ரஞ்சி ட்ராபியில் ஆட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். மற்ற இந்திய வீரர்கள் 9 நாட்கள் ஓய்வு எடுக்கும் போது ரோஹித் சர்மா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ரஞ்சி ட்ராபியில் தங்களின் மும்பை மாநில அணிக்காக ஆடக் கூடும்.