மும்பை : இந்திய டெஸ்ட் அணியில் விராட் கோலி, கே எல் ராகுல் ஆகியோர் இல்லாத நிலையில் கடந்த ஆறு ஆண்டுகளாக உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக ஆடி ரன் குவித்து வந்த சர்பராஸ் கானுக்கு அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. தற்போது 15 வீரர்களில் ஒருவராக அவரை தேர்வு செய்துள்ளது பிசிசிஐ தேர்வுக் குழு.
இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் தோல்வி அடைந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி களமிறங்க உள்ளது. அந்தப் போட்டியில் சர்பராஸ் கான் இடம் பெறுவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதே போல, மற்றொரு வீரரான ரஜத் படிதாருக்கும் வாய்ப்பு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த நிலையில் கிரிக்கெட்டில் மும்பை லாபி எனப்படும் முன்னாள் மும்பை மாநில கிரிக்கெட் வீரர்கள் சர்பராஸ் கானுக்கு எதிராக தங்கள் வேலையைக் காட்ட துவங்கி விட்டார்கள். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவரை இந்திய அணியில் சேர்க்கக் கூடாது. அவருக்கு பதிலாக ஏற்கனவே இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு பெற்றும் களமிறங்காமல் காத்திருக்கும் ரஜத் படிதாருக்கு தான் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என மும்பையை சேர்ந்த முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேசி இருக்கிறார்.
இதில் கொடுமை என்னவென்றால் சர்பராஸ் கான் மும்பை மாநில கிரிக்கெட் அணியில் தான் ஆடி வருகிறார். ஆனால், அவருக்கு எதிராக அந்த மாநில கிரிக்கெட் அமைப்பிலேயே பல்வேறு நபர்கள் உள்ளனர். அவர் மீது வயதை குறைத்து ஏமாற்றியதாக ஒருமுறை மும்பை மாநில கிரிக்கெட் அமைப்பில் புகார் கூறப்பட்டு சிறிது காலம் தடையில் இருந்தார். ஆனால், அந்த குற்றச்சாட்டு பொய் என நிரூபிக்கப்பட்டு மீண்டும் மும்பை அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
தற்போது இந்திய அளவில் உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் ஆடி வரும் வீரர்களில் மிக அதிக பேட்டிங் சராசரி கொண்டவர் சர்பராஸ் கான் தான். ஆனாலும், அவரை இத்தனை காலம் இந்திய அணியில் ஆட விடாமல் செய்ததும் இதே மும்பை லாபி தான் எனக் கூறப்படுகிறது. அதே மும்பை மாநிலத்தை சேர்ந்த ரோஹித் சர்மா தான் இந்திய அணிக்கும் கேப்டனாக இருக்கிறார். அவர் சர்பராஸ் கானை இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆட வைப்பாரா? இல்லையா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.