
முதல் நாள்
நேற்றைய போட்டியின் முடிவு வரை இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 276 ரன்களை சேர்த்திருந்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா 83 ரன்களையும், கே.எல்.ராகுல் சதமும் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தியிருந்தனர். சட்டீஸ்வர் புஜாரா வழக்கம் போல ஏமாற்றமளித்தார். 23 பந்துகளை சந்தித்த அவர் 9 ரன்களுக்கு வெளியேறினார்.

என்ன தவறு
2019ம் ஆண்டிற்குப் பிறகு புஜாரா 3,4,5 வது ஸ்டெம்ப் லைனில் வரும் பந்துகளை எதிர்கொள்ளத் திணறி வருகிறார்.குறிப்பாக, வேகப்பந்து வீச்சாளர்கள் 3,4,5வது ஸ்டெம்ப் லைனில் பந்துவீசினால், அதனைப் பேட்டின் நடுப்பகுதியில் வாங்க முடியாமல் தவித்து வருகிறார். 2019ஆம் ஆண்டிற்குப் பிறகு, 3,4,5ஆவது ஸ்டெம்ப் லைனில் வரும் பந்துகளில் மட்டுமே இவர் ஆட்டமிழந்துள்ளார்.

தொடக்கமே சறுக்கல்
இன்றைய நாள் ஆட்டம் இந்தியாவுக்கு சற்று சறுக்கலாகவே தொடங்கியது. நேற்றைய ஆட்டம் முழுவதும் நிதானம் காத்து ஆடி வந்த கே.எல்.ராகுல், இன்று சற்று ஆர்வக்கோளாறு போன்று அடித்து ஆட முற்பட்டார். அதிலும் ராபின்சன் வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே அவுட்சைட் ஆஃப் ஆக வந்த பந்தை ராகுல் அடிக்க முயன்றார். அந்த பந்து சற்று உயரம் அதிகமாக வந்த போதும், அதனை விட்டுவிடாமல், கவர் ட்ரைவ் ஆட நினைத்து, கேட்ச் ஆனார். இங்கிலாந்து களத்தை பொறுத்தவர பேட்ஸ்மேன்கள் சற்று தோள்பட்டையை அதிகமாக நீட்டி ஆடிவிட்டால் எட்ஜாவது உறுதி என்பது போல் உள்ளது. அதற்கு சான்று ராகுலின் விக்கெட். ராகுல் பொறுமையாக நின்று ஆடியிருந்தால், இந்தியாவுக்கு டாப் ஆர்டரில் இன்னும் கொஞ்சம் ரன் கிடைத்திருக்கும்.

ரகானே
கே.எல்.ராகுல் இளம் வீரர், ஆர்வமாக விளையாடிவிட்டார் என கூறலாம். ஆனால் மிகுந்த அனுபவம் வாய்ந்த துணை கேப்டன் ரகானே மோசமான ஷாட்டை தேர்வு செய்து வெளியேறினார். ராகுல் வெளியேறியதை போன்றே அவுட்சைட் ஆஃப் திசையில் வைட் லைனில் பந்து போடப்பட்டது. இதனை சுலபமாக விட்டிருக்கலாம். ஆனால் வைட் திசைக்கு சென்ற பந்தை வேண்டுமென்றே தூக்கி ஆட நினைத்து எட்ஜானார் ரகானே. இவர்களின் இந்த சொதப்பலால், இந்திய அணியின் ஸ்கோர் 400 ஐ தாண்டாது என்பதை உறுதி செய்துவிட்டது.

அனுபவம் குறைந்த வீரர்
இதன் பின்னர் வந்த ரிஷப் பண்ட் தனது வழக்கமான ஆட்டத்தை காட்டி மலமலவென ரன்களை உயர்த்தினார். ஆனால் அதே வேளையில் அனுபவம் குறைந்த வீரர் என்பதையும் காட்டிவிட்டார். ஒருகட்டத்திற்கு மேல் எந்த திசையிலும் காலினை நகர்த்தாமல் நின்ற இடத்திலேயே பண்ட் ஆடிக்கொண்டிருந்தார். இதனை கவனித்த மார்க் வுட், சரியான நேரத்தில் அவுட்சைட் ஆஃப் திசையில் வைட் லைனில் ஷார்ட் பிட்ச் பந்து ஒன்றை போட்டார். ரிஷப் பண்ட் இதனை நகர்ந்து நின்று சுழற்றிவிட்டிருந்தால், பவுண்டரிக்கு சென்றிருக்கும். ஆனால் நின்ற இடத்திலேயே சுற்றி கேட்சானார். இதே போன்ற தவறை தான் ஜடேஜாவும் செய்து அவுட்டானார்.

சிறிய தவறுகள்
அனுபவம் நிறைந்த இந்திய அணி வீரர்கள் இதுபோன்ற சிறிய தவறுகளை செய்ததால், ஸ்கோர் எதிர்பார்த்ததை விட குறைந்தது. முதல் இன்னிங்ஸில் 364 ரன்கள் எடுத்தது. இதன் பின்னர் ஆடிய இங்கிலாந்து முதலில் சற்று மிதப்பில் ஆடியது. அதன் காரணமாகவே விக்கெட்களை பறிகொடுத்தது. இங்கிலாந்தில் முதல் முறையாக பந்துவீசும் முகமது சிராஜின் ஐடியாக்கள் குறித்து இங்கிலாந்து பேட்ஸ்மேன்களால் இன்னும் கணிக்கமுடியவில்லை. இதன் காரணத்தினால் முதல் இரண்டு விக்கெட்களை அவர் எடுத்துக்கொடுத்தார்.

முடிவு என்ன
எனினும் அடுத்து வந்த அனுபவ வீரர்களான ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ ஆகியோரிடம் அந்த பாட்ஷா பழிக்கவில்லை. கடந்த போட்டியில் ஜோ ரூட் தான் சதம் அடித்து இந்தியாவுக்கு அச்சுறுத்தல் கொடுத்தார். எனவே இந்த முறை அவரின் விக்கெட்டை எடுக்க கோலி தொடக்கத்திலேயே வியூகம் வகுத்து வெற்றியும் பெற்றிருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. ஜோ ரூட் அரைசதத்தை நெருங்கியுள்ளார். இன்றைய நாள் முடிவில் இங்கிலாந்து அணி 119/ 3 ரன்களை எடுத்துள்ளது. நாளை போட்டியில் தொடக்கத்திலேயே ரூட்டின் விக்கெட்டை எடுத்தால் இந்திய அணி வெற்றி பிரகாசமாகும்.


Click it and Unblock the Notifications











