
3ம் நாள் ஆட்டம்
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸின் தொடக்கத்திலேயே 2 விக்கெட்களை இழந்து தடுமாறியது. ஆனால் பின்னர் வந்த கேப்டன் ஜோ ரூட், பேர்ஸ்டோ ஜோடி அணியின் ஸ்கோரை உயர்த்தி கம்பேக் கொடுத்தனர். சிறப்பாக விளையாடி வரும் கேப்டன் ஜோ ரூட் இந்த போட்டியிலும் சதமடித்து அசத்தியுள்ளார். இதனால் விக்கெட்களை எடுப்பதில் இந்திய வீரர்கள் வியூகம் வகுத்து வருகின்றனர்.

இங்கி, ரசிகர்களின் செயல்
இந்நிலையில் ஆட்டத்தின் போது கே.எல்.ராகுல் மீது இங்கிலாந்து ரசிகர்கள் திடீரென மதுபான மூடிகளை வீசி எறிந்துள்ளனர். கிரிக்கெட் போட்டிகளில் களத்தில் இருக்கும் வீரர்கள் மீது ரசிகர்கள் ஏதேனும் பொருட்களை வீசி எறிவது வாடிக்கையாக நடந்து வருகிறது. சமீபகாலமாக போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்ததால் அது போன்ற சம்பவங்கள் குறைந்திருந்தன. இந்த சூழலில் தற்போது மீண்டும் அது தொடங்கியுள்ளது.

குழப்பமான ராகுல்
கொரோனா அச்சுறுத்தல் குறைந்துள்ளதால் இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டியை காண முழு அளவில் ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இப்போட்டியின் 3வது நாளான இன்று கே.எல்.ராகுல் பவுண்டரி லைன் அருகே ஃபீல்டிங் செய்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் மீது திடீரென மதுபான பாட்டில்களின் மூடிகளை வீசி எறிந்தனர். எதற்காக அவர்கள் அப்படி செய்கிறார்கள் என ராகுலும் புரியாமல் திகைத்து போய் நின்றார். இதனை வர்ணனையாளர்களும் பார்த்து அது குறித்து பேசி வந்தனர்.

கடுப்பான கோலி
இந்த சம்பவம் குறித்து அறிந்த கேப்டன் விராட் கோலி, பொறுமையை இழந்தார். கே.எல்.ராகுலிடம், அந்த மூடிகளை எடுத்து வேகமாக ரசிகர்கள் மீதே விட்டு எறியுங்கள் என கோபத்துடன் தெரிவித்தார். இங்கிலாந்து டெஸ்டில் மிகவும் பொறுமையாக செயல்பட்டு வந்த கோலியையே கோபப்படுத்தியதால் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

என்ன காரணம்
கே.எல்.ராகுல் மீது இங்கிலாந்து ரசிகர்கள் கோபத்துடன் இருந்ததற்கு அவர் அதிக சதம் அடித்ததே காரணமாக பார்க்கப்படுகிறது. முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடிய தொடக்க வீரர் கே.எல்.ராகுல், 129 ரன்களை குவித்து இந்திய அணியின் ஸ்கோர் உயர்வதற்கு முக்கிய காரணமாக விளங்கினார்.


Click it and Unblock the Notifications











