மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது t20 போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன், தோனி போல் அபாரமாக செயல்பட்டு இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்த சூழலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இங்கிலாந்து அணி களமிறங்கி இருக்கிறது. இந்த சூழலில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் இரண்டு ஓவர்களில் அமைதி காத்த இங்கிலாந்து வீரர்கள் அதன்பிறகு அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

இதன் காரணமாக பவர் பிளே முடிவில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்திருந்தது. இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் நிதானமாக விளையாடி வந்த நிலையில், அவர் களத்தில் அதிக நேரம் நின்றால் அது இந்தியாவுக்கு ஆபத்தாக போய் முடியும் என்பதால் அவருடைய விக்கெட்டை வீழ்த்த சூரியகுமார் யாதவ் தீவிரமாக இருந்தார்.
இந்த சூழலில் தமிழக கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தியை அழைத்து பந்து வீச கூறினார். அப்போது ஜாஸ் பட்லர் வருண் சக்கரவர்த்தி பந்தை ரிவர் ஸ்வீப் செய்ய முயன்றார். பட்லர் இந்த சாட்டை ஆடப்போகிறார் என்பதை கணித்த சஞ்சு சாம்சன் அதற்கு தயாராக நின்று கேட்சை பிடித்தார். ஆனால் இதற்கு கள நடுவர் அவுட் வழங்கவில்லை.
எனினும் சஞ்சு சாம்சன் பந்து பேட்டில் பட்டது என்றும் இது அவுட் தான் என்றும் உறுதியாக கூறினார். இதனை அடுத்து சூரியகுமார் யாதவ், இதற்கு டிஆர்எஸ் கேட்டார். இதனை அடுத்து டிஆர்எஸ் இல் சஞ்சு சாம்சன் சொன்னது உண்மை என தெரிய வந்தது. இதன் மூலம் ஜாஸ் பட்லர் ஆட்டமிழந்தார்.
இது போட்டியில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. ஜாஸ் பட்லர் வெளியேறியதை அடுத்து அடுத்து இங்கிலாந்து வீரர்கள் ஆட்டம் இழந்து வருகின்றனர். விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் அபாரமாக செயல்பட்டு தோனி போல் drs எடுத்து விக்கெட்டை இந்தியாவுக்கு பெற்றுக் கொடுத்திருப்பதாக ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.