ராஜ்கோட் : இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் துருவ் ஜுரேல் தன் அறிமுகப் போட்டியிலேயே கீப்பிங்கில் சிறப்பாக செயல்பட்டு பாராட்டுக்களை குவித்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ள நிலையில் முதல் இரண்டு போட்டிகளில் கே எஸ் பாரத் விக்கெட் கீப்பராக செயல்பட்டார். அவர் கீப்பிங்கில் ஓரிரு தவறுகள் செய்தார். அதை விட மோசமாக பேட்டிங்கில் ரன் குவிக்காமல் தடுமாறினார். இதை அடுத்து இளம் விக்கெட் கீப்பரான துருவ் ஜுரேலுக்கு மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு அளிக்கப்பட்டது.

இந்திய டெஸ்ட் அணியில் ரிஷப் பண்ட்டுக்கு இணையாக எந்த விக்கெட் கீப்பரும் செயல்படாத நிலையில், இளம் வீரரான துருவ் ஜுரேல் மீது அந்த எதிர்பார்ப்பு இருந்தது. பேட்டிங்கில் நிதான ஆட்டம் ஆடிய போதும் மூன்று சிக்ஸ் அடித்த துருவ், 46 ரன்கள் சேர்த்து தன் பேட்டிங் திறனை நிரூபித்தார்.
அடுத்து இங்கிலாந்து அணியின் இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங்கின் போது அதிரடி வீரர் பென் டக்கெட்டை ரன் அவுட் செய்து திருப்பு முனை ஏற்படுத்தினார். பென் டக்கெட் முதல் இன்னிங்ஸில் சதம் அடித்து இருந்த நிலையில் அவர் விக்கெட்டை விரைவாக வீழ்த்த வேண்டும் என்ற பதற்றத்தில் இருந்தது இந்திய அணி.
அப்போது 7வது ஓவரின் முதல் பந்தை அடித்த டக்கெட் ரன் ஓட முயன்றார். அப்போது பந்தை சிராஜ் எடுத்ததை பார்த்த அவர் மீண்டும் கிரீசுக்கு ஓடி வர முயன்றார். சிராஜ் பந்தை எடுப்பதற்கு முன்பே தூரத்தில் இருந்த துருவ் ஜுரேல் மின்னல் வேகத்தில் ஓடி வந்து ஸ்டம்ப் அருகே பந்தை பிடித்து ரன் அவுட் செய்தார். அவரது சரியான யோசனை மற்றும் துடிப்பான செயல்பட்டால் மட்டுமே இந்த ரன் அவுட் சாத்தியமானது.
இந்த வகையில் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங்கில் ரிஷப் பண்ட்டுக்கு இணையான வீரராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு இருக்கிறார் துருவ் ஜுரேல். அதுவும் தனது அறிமுகப் போட்டியிலேயே நல்ல பெயரை வாங்கி விட்டார். இனி அவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.