
ஏமாற்றம்
இப்போட்டியில், அணியின் தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் முதல் ஓவரிலேயே வெளியேறினார். பின்னர் வந்த புஜாரா, 9 பந்துகளை சந்தித்து ஒரேயொரு ரன் மட்டும் எடுத்து அவுட்டானார். இதன் பிறகு, கேப்டன் விராட் கோலி 17 பந்துகளை சந்தித்து 7 ரன்கள் மட்டும் எடுத்து. இதற்கு அடுத்து வந்த அனைத்து வீரர்களும் சொதப்ப, 2வது செஷன் முடிவடைவதற்குள் இந்திய அணி 78 ரன்களுக்கு சுருண்டது. கடந்த போட்டியில் 89 ரன்கள் பார்ட்னர்ஷிப் குவித்த பும்ரா - ஷமி இருவரும் கோல்டன் டக் அவுட்டாகினர்.

இங்கிலாந்து பேட்டிங்
இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கும் ஆரம்பமே அமர்களமாக அமைந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் ரோரி பேர்ன்ஸ் மற்றும் ஹசீப் ஹமீத் ஆகியோர் சீரான வேகத்தில் ரன்களை குவித்து தலைவலி கொடுத்தனர். இதனால் முதல் விக்கெட்டிற்கு இந்த ஜோடி 135 ரன்களை சேர்த்தது. பேர்ன்ஸ் 61 ரன்களை எடுத்து ஷமியின் வேகத்தில் வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரரான ஹசீப் ஹமீத்தை 68 ரன்களுக்கு பெவிலியனுக்கு அனுப்பினார் ரவீந்திர ஜடேஜா. இந்த டெஸ்ட் தொடரில் 41 விக்கெட்களை வேகப்பந்துவீச்சாளர்களே தொடர்ந்து எடுத்த நிலையில் 42வது விக்கெட்டை ஒருவழியாக சுழற்பந்துவீச்சாளர் எடுத்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இது முதல் முறையாகும்.

ஜோ ரூட் 3வது சதம்
இனி இந்திய அணி கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் ஒரு பார்ட்னர்ஷிப் தலைவலி கொடுத்தது. அனுபவ வீரர் டேவிட் மாலனுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் ஜோ ரூட் இங்கிலாந்து அணியின் ஸ்கோரை உச்சிக்கு எடுத்துச் சென்றார். சிறப்பாக விளையாடிய அவர், இந்த போட்டியிலும் சதம் விளாசினார். இந்த தொடரில் ஜோ ரூட் அடிக்கும் 3வது சதம் இதுவாகும். இதே போல இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அடிக்கும் 8வது சதம் இதுவாகும்.

ட்விஸ்ட் கொடுத்த சிராஜ்
நீண்ட நேரமாக நிலைத்திருந்த இந்த பார்ட்னர்ஷிப்பை இளம் வீரர் முகமது சிராஜ் உடைத்தார். அவர் வீசிய பந்தில் அவசரப்பட்டு ஆட முயன்ற டேவிட் மாலன் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து 70 ரன்களுக்கு வெளியேறினார். மறுமுணையில் இருந்த ஜோ ரூட் 121 ரன்களுக்கு பும்ராவின் வேகத்தில் போல் அவுட் ஆனார். இங்கிலாந்தின் டாப் ஆர்டரை காலி செய்த இந்திய அணி மிடில் ஆர்டர் விக்கெட்களை அடுத்தடுத்து எடுத்து கம்பேக் கொடுத்தது.

ஆட்ட நேர முடிவு
ஜானி பேர்ஸ்டோ 29 ரன்கள், ஜாஸ் பட்லர் 7 ரன்கள், மொயின் அலி 8 ரன்கள், சாம் கரண் 15, என அனைவரும் வந்த வேகத்தில் வெளியேறினர். இதனால் 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 423 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்துள்ளது. ஓவர்டன் மற்றும் ராபின்சன் ஆகியோர் களத்தில் உள்ளனர். இதன் மூலம் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியை விட 345 ரன்கள் முன்னிலை பெற்றது.

ஆல் அவுட்
இந்நிலையில் இன்று 2ம் நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே இங்கிலாந்து அணியில் மீதம் இருந்த 2 விக்கெட்களும் சரிந்தன. பும்ரா மற்றும் ஷமி ஆகியோர் இந்த விக்கெட்களை எடுத்தனர். இதனால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 432 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணியை விட 354 ரன்கள் முன்னிலை பெற்றது.

அதிக எதிர்பார்ப்பு
இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை சமன் செய்யவே இந்திய அணிக்கு இன்னும் 354 ரன்கள் தேவை என்பதால், ஆட்டத்தில் அதிரடி காட்ட வேண்டிய சூழலுக்கு இந்திய பேட்ஸ்மேன்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஆனால் ஹெட்டிங்லி பிட்ச்-ல் அதிரடி காட்டினால் ஈசியாக விக்கெட்கள் சரிந்துவிடும். இதனால் இந்திய பேட்ஸ்மேன்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











