ஆயுதத்தை இறக்கிய சிராஜ்.. பம்மி பதுங்கிய இங்கிலாந்து.. அஸ்வின் இல்லாமலே சோலியை முடித்த இந்தியா
ராஜ்கோட் : மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்டத்தில் பெரிதாக ரன் குவித்த போதும், மூன்றாவது நாள் ஆட்டத்தில் முகமது சிராஜ் வீசிய அனல் பறக்கும் பந்துவீச்சில் பம்மி பதுங்கியது. அஸ்வின் பாதி போட்டியில் வெளியேறிய நிலையிலும், அவர் இல்லாமல் சிராஜ், குல்தீப் யாதவ், ரவிந்திர ஜடேஜா இணைந்து இங்கிலாந்து விக்கெட்களை சிதற விட்டனர்.
ராஜ்கோட் மைதானத்தில் நடந்து வரும் இந்தப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 445 ரன்கள் குவித்தது. அடுத்து தங்களின் முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங் தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு துவக்க வீரர் பென் டக்கெட் நம்பிக்கை அளித்தார். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்து இருந்தது. இரண்டாம் நாள் இரவு அஸ்வின் தன் தாயை மருத்துவமனையில் சேர்த்து இருப்பதால் பாதி போட்டியில் விலகினார்.

அடுத்து மூன்றாம் நாள் ஆட்டத்தில் மற்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆடாத நிலையில், பென் டக்கெட் அதிரடி ஆட்டம் ஆடி 153 ரன்கள் குவித்தார். அவருக்கு அடுத்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அதிகபட்சமாக 41 ரன்கள் மட்டுமே சேர்த்தார். அஸ்வின் இல்லாத நிலையில் முகமது சிராஜ் சிறப்பாக பந்து வீசினார். நீண்ட நாட்களுக்கு பின் தனது ஆக்ரோஷத்தை பந்துவீச்சில் காட்டினார்.
299 ரன்களுக்கு 5 விக்கெட்கள் இழந்து இருந்த இங்கிலாந்து அணி அடுத்த 20 ரன்களை சேர்ப்பதற்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 319 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. முகமது சிராஜ் 4, குல்தீப் யாதவ் 2, ரவீந்திர ஜடேஜா 2, பும்ரா 1, அஸ்வின் 1 விக்கெட் வீழ்த்தினர். முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 126 ரன்கள் முன்னிலை பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 300 ரன்கள் குவித்தால் இங்கிலாந்து அணிக்கு கடும் சவாலான இலக்கை நிர்ணயிக்கலாம்.


Click it and Unblock the Notifications