மும்பை : இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டிக்கு முன் கே எல் ராகுல் செய்த விஷயம் ஒன்று பிசிசிஐ-யை கடும் அதிருப்தி அடையச் செய்துள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகின்றன. இந்த தொடரின் முதல் போட்டியில் மட்டுமே கே எல் ராகுல் ஆடினார். அப்போது அவருக்கு காயம் ஏற்பட்டதால் அவர் இரண்டாவது டெஸ்ட்டில் இருந்து நீக்கப்பட்டார். அவர் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், அவர் இன்னும் முழு உடற்தகுதி பெறவில்லை என பிசிசிஐ மருத்துவர்கள் கூறி விட்டனர்.

இதை அடுத்து அவர் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்பட்டார். தனக்கு மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு கிடைக்காது எனத் தெரிந்தும், தனது சமூக வலைதள பக்கத்தில் பேட்டிங் பயிற்சி செய்வது போன்ற வீடியோவை பகிர்ந்தார் கே எல் ராகுல்.
அதைப் பார்த்த பலரும் கே எல் ராகுல் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு தயாராகி விட்டார் என நினைத்தனர். அப்படியே செய்தியும் பரவியது. ஆனால், அதற்கு மறுநாள் கே எல் ராகுல் மூன்றாவது டெஸ்ட்டில் ஆட மாட்டார் என உறுதியான செய்தி வெளியானது. கே எல் ராகுல் தவறான தகவலை பரப்பும் வகையில் தனது பயிற்சி வீடியோவை பகிர்ந்தது பிசிசிஐ அதிகாரிகளை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கி இருக்கிறது.
மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இப்படி ஒரு வீடியோவை பதிவு செய்தால் அவரை அணியில் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். அல்லது அவர் மூன்றாவது டெஸ்ட்டில் பங்கேற்கவில்லை என்றால் ரசிகர்கள், பிசிசிஐ மீது தான் பாய்வார்கள். அதாவது பயிற்சி வீடியோவில் அவர் பேட்டிங் செய்ததை வைத்து அவர் காயத்தில் இருந்து மீண்டு பயிற்சி செய்யத் துவங்கிய பின்னரும் அவரை அணியில் தேர்வு செய்யவில்லை என ரசிகர்கள் இந்திய அணி நிர்வாகத்தையும் பிசிசிஐயையும் விமர்சனம் செய்வார்கள். அதன் காரணமாகவே பிசிசிஐ கே எல் ராகுல் மீது அதிருப்தியில் உள்ளது.