லண்டன்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெறும் லார்ட்ஸ் மைதானத்தில் வரலாறு காணாத வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் போட்டிக்கு பெரும் திரளான ரசிகர்கள் வரும் நிலையில் மைதானத்தில் எந்தவிதமான விரும்பத்தகாத சம்பவங்களையும், போராட்டங்களையும் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கடந்த ஆண்டு நடந்த ஒரு சம்பவத்தை சுட்டிக் காட்டுகிறார்கள்.
கடந்த ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் போது, ஆஸ்திரேலிய வீரர்கள் வார்த்தை ரீதியான தாக்குதலுக்கு ஆளானதும், மைதானத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர் ஒருவர் ஆடுகளத்தில் ஆரஞ்சு வண்ணப் பெயின்ட்டை கொட்டியதும் குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக, தற்போது லார்ட்ஸ் மைதானத்துக்குள் கொடிகள் மற்றும் பதாகைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பார்வையாளர்களைத் திடீர் சோதனைக்கு உட்படுத்துவது, இரகசியப் பாதுகாப்பு பணியில் காவலர்களை நியமிப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்ற சூழ்நிலைகள் காரணமாக லண்டனில் பாகிஸ்தானியர்கள் ஏதேனும் சமூக விரோத செயல்களில், வீரர்களை சீண்டும் நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்பதும் இந்த தீவிர பாதுகாப்புக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
இந்தப் போட்டியைப் பொறுத்தவரை, டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. பந்துவீச்சுக்குச் சாதகமான சூழல் இருந்ததால், தங்களின் வழக்கமான 'பேஸ்பால்' அதிரடி ஆட்டத்தைக் கைவிட்டு, நிதானமாக விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களான சாக் கிராலி மற்றும் பென் டக்கெட் ஆகியோரை ஒரே ஓவரில் நிதிஷ் ரெட்டி வீழ்த்தினாலும், ஜோ ரூட் மற்றும் ஒல்லி போப் ஆகியோர் அணியை மீட்டனர்.
போப் 44 ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கடந்த போட்டியில் அபாரமாக ஆடிய ஹாரி புரூக்கை, பும்ரா வெளியேற்றினார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து அணி வலுவான நிலையில் இருந்தது. ஜோ ரூட் 99 ரன்களுடனும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 39 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். அவர்களின் பிரிக்கப்படாத 79 ரன்கள் பார்ட்னர்ஷிப்பால், முதல் நாள் இங்கிலாந்துக்குச் சாதகமாக முடிந்தது.