லண்டன்: லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில், அம்பயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில். பந்தின் தரம் குறித்து இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் ஆகியோர் அம்பயருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சுப்மன் கில் ஒருபடி மேலே போய் அம்பயரின் கையில் இருந்த பந்தை பறித்தார்.
இந்தப் இரண்டாவது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் 80வது ஓவரில் எடுக்கப்பட்ட இரண்டாவது புதிய பந்து குறித்து சர்ச்சை எழுந்தது. சுமார் 10 ஓவர்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்ட நிலையில் அதன் வடிவம் மாறியதாக இந்திய அணி புகார் அளித்தது. இதனைத் தொடர்ந்து, அம்பயர்கள் பந்தைச் சோதனை செய்து பார்த்ததில், அது தகுதியற்றது எனக் கண்டறியப்பட்டு மாற்றுப் பந்து வழங்கப்பட்டது.

ஆனால், அந்த மாற்றுப் பந்தின் நிலையும் திருப்திகரமாக இல்லை என்று கூறி, கேப்டன் சுப்மன் கில் அம்பயருடன் ஆவேசமாக விவாதித்தார். 10 ஓவர் மட்டுமே பயன்படுத்தப்பட்ட பந்தை தராமல் அதிக ஓவர்கள் வீசப்பட்ட ஒரு பந்தை அளித்ததாக இந்திய அணி சார்பில் கூறப்பட்டது.
ஸ்டம்ப் மைக்கில் பேசிய சிராஜ், "இது 10 ஓவர் பழைய பந்தா? உண்மையாகவா?" என்று அதிருப்தியை வெளிப்படுத்தினார். சுப்மன் கில் கோபத்துடன் நடுவரின் கையிலிருந்த பந்தைப் பிடுங்கியதும் காணொளிகளில் பதிவானது. இந்த வாதங்களை அம்பயர் ஏற்க மறுத்துவிட்டார்.
அம்பயரின் முடிவிற்கு எதிராக இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், ஐசிசி நடத்தை விதி 2.8-இன் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் தொடர் முழுவதும் டியூக்ஸ் பந்தின் தரம் ஒரு பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. முன்னதாக, இந்திய துணை கேப்டன் ரிஷப் பண்ட், "பந்து அதன் வடிவத்தை மிக அதிகமாக இழக்கிறது, இது ஆட்டத்திற்கு நல்லதல்ல" என்று விமர்சித்திருந்தார். பந்து மாற்றப்பட்ட பிறகு இந்திய பந்துவீச்சாளர்களுக்கு எதிர்பார்த்த ஸ்விங் கிடைக்கவில்லை. இதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட இங்கிலாந்து வீரர்கள் ப்ரைடன் கார்ஸ் மற்றும் ஜேமி ஸ்மித் ஆகியோர் சிறப்பான ஜோடி கூட்டணியை அமைத்து அணியைச் சரிவிலிருந்து மீட்டனர்.
லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 112.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 387 ரன்கள் குவித்தது.
இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் சிறப்பாக விளையாடி 104 ரன்கள் குவித்து சதமடித்தார். மற்ற வீரர்கள் பென் டக்கெட் 23, சாக் கிராலி 18, ஆலி போப் 44, பென் ஸ்டோக்ஸ் 44, ஜேமி ஸ்மித் 51 மற்றும் ப்ரைடன் கார்ஸ் 56 ரன்கள் எடுத்தனர்.
இந்திய தரப்பில், ஜஸ்பிரித் பும்ரா அபாரமாகப் பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சிராஜ் 2 விக்கெட்டுகளையும், நிதிஷ் ரெட்டி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
இங்கிலாந்தின் முதல் 2 விக்கெட்கள் 44 ரன்களில் வீழ்ந்தது. அதன் பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், ஜோ ரூட் மற்றும் மற்ற வீரர்களின் கணிசமான பங்களிப்பால் இங்கிலாந்து அணி சவாலான ஸ்கோரை எட்டியது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள், குறிப்பாக பும்ரா, சிறப்பாகச் செயல்பட்டு இங்கிலாந்து அணியை 400 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினர்.