
தொடக்கமே பெரும் அதிர்ச்சி
அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் ஷர்மா, லோகேஷ் ராகுல் களமிறங்கினர். முதல் ஓவரை ஆண்டர்சன் வீசினார். அந்த முதல் ஓவரிலேயே இந்தியாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. லார்ட்ஸ் டெஸ்ட்டில் சதம் அடித்து அசத்திய லோகேஷ் ராகுல், முதல் ஓவரிலேயே ஆண்டர்சனிடம் ரன் ஏதும் எடுக்காமல் கேட்ச் ஆகி வெளியேறினார். இதனால், புஜாரா 2வது ஓவரிலேயே களமிறங்கினார். ஆனால் தான், சந்தித்த 10 பந்திலேயே புஜாரா, ஒரேயொரு ரன் மட்டும் எடுத்து அவுட்டானார்.

கோலியின் சொதப்பல்
இதன் பின்னர் களமிறங்கிய கேப்டன் விராட் கோலி அணியை மீட்டுக்கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அவரும் ஏமாற்றத்தையே கொடுத்தார். ஆண்டர்சன் வீசிய பந்தில் 7 ரன்களுக்கு கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கேப்டன் விராட் கோலி கடந்த 50 டெஸ்ட் போட்டிகளில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை என்ற மோசமான சாதனையும் படைக்கப்பட்டது.

துணைக் கேப்டனும் கைவிட்டார்
3வது விக்கெட்டிற்கு களமிறங்கிய துணைக் கேப்டன் அஜிங்கியா ரஹானே, 18 ரன்களுக்கும், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் 2 ரன்களுக்கு வந்த வேகத்தில் நடையை கட்டினார். இதனால் இந்திய அணி 58 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து மோசமான நிலைக்கு சென்றது. மறுமுனையில் நீண்ட நேரமாக பார்ட்னர்ஷிப் அமைக்க போராடி வந்த ரோகித் சர்மா 105 பந்துகளை சந்தித்து 19 ரன்களுக்கு வெளியேறினார்.

ஆல் அவுட்
டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களே அடுத்தடுத்து சரிந்ததால், டெயில் எண்டர்ஸால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. ரவீந்திர ஜடேஜா 4 ரன்கள், இஷாந்த் சர்மா 0, பும்ரா 0, முகமது சிராஜ் 2 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து பெவிலியன் நோக்கி நடையை கட்டினர். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 78 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

ஹெட்டிங்லி மைதானம்
ஹெட்டிங்லி மைதானம் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபனம் ஆகியுள்ளது. குறிப்பாக இன்று காலை அங்கு மழை பெய்துள்ளதால், ஆட்டத்தின் முதல் பந்து முதலே பந்தில் நல்ல ஸ்விங் ஆகி வந்தது. ஆனால் விராட் கோலி இதனை அறிந்துமே டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது விமர்சனங்களை கிளப்பியுள்ளது.


Click it and Unblock the Notifications