ராஜ்கோட் : இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் காயத்தால் ரிட்டையர்ட் ஹர்ட் ஆன யஷஸ்வி ஜெய்ஸ்வால் மீண்டும் பேட்டிங் ஆட வருவார் என இந்திய அணி வட்டாரம் கூறி உள்ளது. ஏற்கனவே சதம் அடித்துள்ள ஜெய்ஸ்வால், தற்போது ஓய்வு எடுத்து விட்டு மீண்டும் பேட்டிங் செய்ய வர உள்ளதால் இங்கிலாந்து அணி அழுத்தத்தில் உள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் ஆடி வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 445 ரன்களும், இங்கிலாந்து அணி 319 ரன்களும் எடுத்தன. இந்தியா 126 ரன்கள் முன்னிலை பெற்று இரண்டாம் இன்னிங்க்ஸ் பேட்டிங்கை தொடங்கியது.

ஜெய்ஸ்வால் அதிரடி ஆட்டம் ஆடி சதம் அடித்து 104 ரன்கள் குவித்தார். அப்போது அவருக்கு முதுகில் வலி ஏற்பட்டதை அடுத்து அவர் ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார். ஏற்கனவே, அஸ்வின் இரண்டாம் நாள் ஆட்டத்துடன் இந்தப் போட்டியில் இருந்து விலகி இருக்கிறார். அதை அடுத்து ஜெய்ஸ்வாலும் பாதி பேட்டிங்கில் விலகியதால் இந்திய அணி குறித்து ரசிகர்கள் கவலை அடைந்தனர்.
ஆனால், ஜெய்ஸ்வால் நான்காம் நாள் ஆட்டத்தின் போது மீண்டும் பேட்டிங் செய்ய வருவார் என இந்திய அணி வட்டாரம் கூறி உள்ளது. ஐசிசி டெஸ்ட் போட்டி விதிகளின்படி ஒரு வீரர் ரிட்டையர்ட் ஹர்ட் முறைப்படி வெளியேறினால், அவர் மீண்டும் குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பின் பேட்டிங் செய்ய வரலாம்.
எனவே, மூன்றாவது நாள் சதம் அடித்து இங்கிலாந்து அணியை பதற வைத்த ஜெய்ஸ்வால், ஓய்வு எடுத்துக் கொண்டு மீண்டும் நான்காவது நாள் பேட்டிங் செய்ய வர இருக்கிறார். இது கிட்டத்தட்ட அவரது புதிய இன்னிங்க்ஸ் போலத் தான். இதை அடுத்து முந்தைய போட்டியில் இரட்டை சதம் அடித்த ஜெய்ஸ்வால், இந்த முறையும் இரட்டை சதம் அடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.