புனே : இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிகரமாக அமைந்திருக்கிறது. ஒரே ஓவரில் இந்திய அணி முக்கிய மூன்று விக்கெட்டுகளை இழந்து இருப்பது ரசிகர்களை எரிச்சல் அடைய செய்திருக்கிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் இந்திய அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்த சூழலில் நான்காவது டி20 போட்டி புனேவில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜாஸ் பட்லர், முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இதனை அடுத்து இங்கிலாந்து அணி வீரர்கள் தங்களது பந்துவீச்சை தொடங்கினார்கள்.

தொடர்ந்து சஞ்சு சாம்சன் இன்று ஷாட் பால்களை எதிர்பார்த்து back foot எடுத்து அனைத்து பந்துகளையும் எதிர்கொண்டார். இந்த சூழலில் முதல் ஓவரில் அபிஷேக் ஷர்மா ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடிக்க இந்திய அணி 12 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து ஆட்டத்தின் இரண்டாவது ஓவரை ஷகிப் மஹமுத் வீசினார்.
இதில் மீண்டும் சஞ்சு சாம்சன் ஒரு ஷாட் பாலை புல் செய்ய அது பவுண்டரில் லைனில் கேட்ச் ஆனது. இதனால் சஞ்சு சாம்சன் ஒரு ரன்னில் பெவிலியன் திரும்பினார். இதனை அடுத்து இரண்டாவது விக்கெட்டுக்கு இந்திய அணி நட்சத்திர வீரர் திலக் வர்மா களமிறங்கினார். திலக் வர்மாவும் எதிர்கொண்ட முதல் பந்திலே தேவையில்லாத ஷாட் ஆடி கேட்ச் ஆனார்.
இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதை அடுத்து கேப்டன் சூரிய குமார் களம் கண்டார். சூரியகுமார் கடைசியாக விளையாடிய ஐந்து இன்னிங்சில் ஒரு முறை கூட 15 ரன்களை தொடவில்லை. இதனால் சூரிய குமார் யாதவுக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டிருந்தது. இந்த சூழலில் சூரிய குமார் அதே ஓவரின் கடைசி பந்தில் ஆட்டம் இழந்தார். சூரிய குமார் டக் அவுட் ஆகி வெளியேறினார். இதனால் சாம்சன், திலக் வருமா சூரியகுமார் யாதவ் என இந்திய அணியின் ஸ்டார் வீரர்கள் ஒரே ஓவரில் மூன்று விக்கெட்டுகளை இழந்தனர்.இதன் மூலம் இந்திய அணி 12 ரன்கள் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது .