ராஞ்சி : இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமான ஆகாஷ்தீப் வீசிய பந்தில் ஸ்டம்ப்பு பறந்தது. தன் முதல் போட்டியில் முதல் விக்கெட்டை எடுத்ததாக நினைத்து துள்ளிக் குதித்தார் ஆகாஷ்தீப். ஆனால், அம்பயர் அவுட் இல்லை என அறிவித்து பெரும் ஏமாற்றத்தை அளித்தார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் ஆடி வரும் நான்காவது டெஸ்ட் போட்டி ராஞ்சி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் பும்ரா பங்கேற்கவில்லை. அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக ஆகாஷ்தீப் என்ற அறிமுக வேகப் பந்துவீச்சாளரை இந்திய அணி களமிறக்கியது.

போட்டியின் நான்காவது ஓவரிலேயே ஆகாஷ்தீப் வீசிய பந்தில் இங்கிலாந்து வீரர் சாக் கிரவுலி இன்சைட் எட்ஜ் செய்தார். ஆஃப் ஸ்டம்ப்பு பறந்தது. தனது முதல் விக்கெட்டை வீழ்த்தியதாக ஆகாஷ்தீப் துள்ளிக் குதித்தார். மற்ற இந்திய வீரர்களும் விக்கெட்டை கொண்டாடினர். ஆனால், அம்பயர் அவுட் தரவில்லை. ஒரு நிமிடம் இருக்குமாறு கூறி விட்டு, அந்த பந்து நோ பால் என்பதை உறுதி செய்தார்.
இதை அடுத்து ஆகாஷ்தீப் நோ பால் வீசியது தெரிய வந்தது. தனது முதல் சர்வதேச விக்கெட்டை வீழ்த்தியதாக நினைத்து மகிழ்ந்து பின் ஏமாற்றம் அடைந்தார் ஆகாஷ்தீப். ஆனால், அதன் பின் கடந்த போட்டிகளில் சதம் அடித்து இருந்த இங்கிலாந்து வீரர்கள் பென் டக்கெட் மற்றும் ஒல்லி போப் ஆகிய இருவரையும் ஒரே ஓவரில் வீழ்த்தி தன் திறமையை நிரூபித்தார் ஆகாஷ்தீப்.
அதன் பின் சாக் கிரவுலி விக்கெட்டையும் வீழ்த்தி தன் தவறை சரி செய்தார். அதன் பின் இங்கிலாந்து அணி தொடர்ந்து விக்கெட்களை இழந்து மதிய உணவு இடைவேளைக்கு முன்னதாக 112 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்தது. இந்திய அணி டாஸில் தோற்ற போதும் பிட்ச்சை சரியாக பயன்படுத்தி விரைவாக விக்கெட்களை சாய்த்தது.