மான்செஸ்டர்: தற்போது நடைபெற்று வரும் டெண்டுல்கர் - ஆன்டர்சன் டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டியில் இந்தியாவும் இங்கிலாந்தும் மோதுகின்றன. இந்தப் போட்டிக்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் வேகப் பந்துவீச்சாளர் அன்ஷுல் கம்போஜ் இந்திய அணியில் சேர்க்கப்பட்டு இருப்பதாக இந்திய அணி வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.
இந்தியா - இங்கிலாந்து மோதும் நான்காவது போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் ஜூலை 23 அன்று தொடங்குகிறது. லார்ட்ஸில் நடந்த முந்தைய போட்டியில் தோல்வியடைந்ததால், இந்தியா தற்போது 1-2 என்ற கணக்கில் தொடரில் பின்தங்கியுள்ளது. இதனால், தொடரை இழக்காமல் இருக்க இந்த மான்செஸ்டர் போட்டியில் இந்தியா வெற்றி பெறுவது அவசியமாகிறது.

இந்த முக்கியமான போட்டிக்கு முன்னதாக, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சில் கவலை அளிக்கும் விதமாக காயங்கள் ஏற்பட்டுள்ளன. இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் வலைப் பயிற்சியின் போது பந்தை தடுக்க முயன்றபோது அவரது பந்துவீசும் கையில் ஆழமான வெட்டுக்காயம் ஏற்பட்டது. இந்தக் காயத்திற்கு தையல் போடப்பட்டுள்ளதால், அவர் முழுமையாக குணமடைய குறைந்தது பத்து நாட்கள் ஆகும் எனக் கூறப்படுகிறது. இதனால் அவர் நான்காவது டெஸ்டில் பங்கேற்க வாய்ப்பில்லை.
இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு கிடைத்த ஒரே வெற்றிக்கு வித்திட்ட வேகப் பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப், இடுப்புப் பகுதி வலியால் அவதிப்பட்டு வருகிறார். இதன் காரணமாக அவர் பயிற்சியில் ஈடுபடவில்லை, எனவே அவரது பங்கேற்பும் சந்தேகத்தில் உள்ளது.
இரண்டு வேகப் பந்துவீச்சாளர்கள் காயத்தில் சிக்கியதை அடுத்து இந்திய அணி நிர்வாகம் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. ஹரியானாவைச் சேர்ந்த 24 வயதான வேகப்பந்து வீச்சாளர் அன்ஷுல் கம்போஜ், மாற்று வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் 2025 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் இடம் பெற்று புகழ் வெளிச்சத்தை பெற்று இருந்தார்.
இவர் சமீபத்தில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டு அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளில் இந்தியா ஏ அணிக்காக விளையாடி இருந்தார். அப்போது 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். மேலும், ஹரியானா அணிக்காக 24 முதல் தரப் போட்டிகளில் விளையாடி 79 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.