ராஞ்சி : இந்தியா - இங்கிலாந்து அணிகள் ஆடி வரும் நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி எடுத்த தவறான முடிவால் பெரும் பின்னடைவை சந்தித்தது. மாறாக இங்கிலாந்து அணியின் மூத்த வீரர் ஜோ ரூட் தன் திட்டத்தை மாற்றி பேட்டிங் செய்து சதம் அடித்தார். முதல் நாள் ஆட்டத்திலேயே இங்கிலாந்து அணியின் கை ஓங்கி இருக்கிறது.
ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2 -1 என முன்னிலையில் இருந்தது. இந்த நிலையில், அணியின் முக்கிய வேகப் பந்துவீச்சாளரான பும்ராவுக்கு ஓய்வு கொடுத்தது இந்திய அணி. ஜோ ரூட் விக்கெட்டை தொடர்ந்து வீழ்த்தி வந்தார் பும்ரா. அவரின் பந்துவீச்சை சமாளித்து ஆடுவதில் ஜோ ரூட்டுக்கு பிரச்சனை இருந்தது.

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி பிட்ச்சின் மோசமான தன்மை காரணமாக முதல் 25 ஓவர்களில் 112 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்தது. ஆனால், அப்போது கலத்தில் இருந்த ஜோ ரூட், மற்ற இங்கிலாந்து வீரர்கள் போல அதிரடி ஆட்டம் ஆட முயற்சி செய்யாமல் நிதான ஆட்டம் ஆடினார். சுமார் 45 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் படுநிதானமாக ரன் சேர்த்தார் அவர். 5 விக்கெட் வீழ்ந்ததால் ஏழாம் வரிசையில் இறங்கிய பென் ஃபோக்ஸ், ஜோ ரூட் வழியை பின்பற்ற முடிவு செய்து அவரும் நிதான ஆட்டத்துக்கு மாறினார்.
அதனால், இந்திய அணியால் விக்கெட் வீழ்த்த முடியாமல் போனது. பின்னர் பென் ஃபோக்ஸ் 126 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின் டாம் ஹார்ட்லி 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முதல் ஒன்பதாம் வரிசையில் இறங்கிய ஒல்லி ராபின்சன் 60 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். சிறப்பாக ஆடிய ஜோ ரூட் தன் 31வது டெஸ்ட் போட்டி சதம் கடந்தார். பும்ரா இல்லாதது ஒரு வகையில் இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்தது.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 307 ரன்கள் குவித்துள்ளது. இந்தப் போட்டி நடைபெற்று வரும் ராஞ்சி பிட்ச் இரண்டாம் நாளில் இருந்து சுழற் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என கூறப்படுவதால் இந்திய அணிக்கு பெரும் சிக்கல் காத்துக் கொண்டு இருக்கிறது.