மும்பை டெஸ்ட்: 400 ரன்களில் இங்கிலாந்து ஆல்-அவுட்.. இந்தியா தக்க பதிலடி
மும்பை: மும்பை டெஸ்டின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 400 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. அஸ்வின் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி தக்க பதிலடி கொடுத்தது.
இந்தியா-இங்கிலாந்து இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாசில் வென்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்த இங்கிலாந்து, முதல் நாள் ஆட்ட நேர முடிவில், 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 288 ரன்கள் குவித்திருந்தது.

இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த அந்த அணி சரியாக, 400 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. சுழற்பந்து ஜாம்பவானாக உருவாகியுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜடேஜா 4 விக்கெட்டுகளை சாய்த்தார். ஜோஸ் பட்லர் இன்று அதிகபட்சமாக 76 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தமாக ஓப்பனர் ஜென்னிங்ஸ் (116 ரன்கள்) இங்கிலாந்துக்காக, அதிகபட்ச ரன் எடுத்தவர். இவர் நேற்றே வீழ்த்தப்பட்டிருந்தார்.
இதையடுத்து இந்தியா தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. ஆட்ட நேர இறுதியில் இந்தியா, ஒரு விக்கெட் இழப்பிற்கு 146 ரன்களை எடுத்திருந்தது. ராகுல் 24 ரன்களில் அவுட்டான நிலையில், முரளி விஜய் 70 ரன்களுடனும், புஜாரா 47 ரன்களுடனும் களத்தில் நின்றனர். மொத்தம் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில், இதுவரை 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இந்தியா 2-0 என முன்னிலை வகிக்கிறது. ஒரு ஆட்டம் சமனில் முடிந்துள்ளது.


Click it and Unblock the Notifications