
4வது டெஸ்ட் போட்டி
இரு அணிகளுக்கும் இடையேயான 4வது டெஸ்ட் போட்டி வரும் செப்டம்பர் 2ம் தேதி முதல் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. வெற்றிக்காக இரு அணிகளும் தீவிர முணைப்புடன் இருப்பதால், போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்நிலையில் ஓவல் மைதான பிட்ச்-ன் தன்மை இந்திய அணியில் அஸ்வினை மீண்டும் கொண்டு வரவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஓவல் பிட்ச் ரிப்போர்ட்
இந்த டெஸ்ட் தொடரில் முதல் 2 போட்டிகளிலும் முழுக்க முழுக்க வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக தான் பிட்ச் அமைந்திருந்தது. ஹெட்டிங்லியில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டி முதலில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக அமைந்த சூழலில், பின்னர் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமானது. ஆனால் 4வது டெஸ்ட் போட்டியில் முற்றிலும் மாறுபட்டுள்ளது.

ஸ்பின்னர்கள் தேவை
அதாவது ஓவல் மைதானத்தின் பிட்ச்சானது சுழற்பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தக்கூடியதாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இரு அணிகளிலும் குறைந்தது 2 சுழற்பந்து வீச்சாளர்கள் களமிறக்க வாய்ப்புள்ளது. லண்டனில் தற்போது நல்ல வெயில் அடித்து வருகிறது. ஒருவேளை மழைப்பொழிவு ஏற்பட்டால் மட்டுமே வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக நன்கு ஸ்விங்காகும்.

மாற்றங்கள்
இதனால் இந்திய அணியில் மீண்டும் அஸ்வின் களமிறக்கப்படலாம். தற்போது வரை 4 வேகப்பந்துவீச்சாளர்கள், மற்றும் ஒரே ஒரு ஸ்பின்னராக ஜடேஜா செயல்பட்டு வருகிறார். ஆனால் அவருக்கும் சமீபத்தில் காயம் ஏற்பட்டது. எனவே இந்த போட்டியில் நிச்சயம் ரவிச்சந்திரன் அஸ்வின் களமிறக்கப்படுவார். இங்கிலாந்து களத்தில் அஸ்வினுக்கு அதிக அனுபவம் உள்ளது என்பதால் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே அச்சுறுத்தல் கொடுக்கக்கூடும்.

திறமையான வீரர்
இந்நிலையில் அஸ்வினின் வருகை குறித்து இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பேசியுள்ளார். ரவிச்சந்திரன் அஸ்வினின் சாதனைகளே அவர், எவ்வளவு திறமையான வீரர் என்பதை கூறிவிடும். அவர் ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரர். அவர் எங்களுக்கு எதிராக விக்கெட்டுகளை வீழ்த்துவதும், பேட்டிங் ஆடும் திறன் குறித்தும் நன்கு அறிவோம். எனவே அவரை சமாளிப்பதற்காக மாற்றங்களை நாங்கள் செய்து தயாராக உள்ளோம். அஷ்வின் சிறப்பான பவுலர் தான் ஆனால் அவரை எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம்.

ஜோ ரூட் சவால்
இந்த டெஸ்ட் போட்டியில் எங்களுக்கு எதிராக யார் வேண்டுமானாலும் வரட்டும். நாங்கள் அஸ்வினுக்கு எதிரான பெருமைகளுடனும், திறமையான வீரர் என்ற பெருமைகளை எதிர்த்து விளையாடப்போவதில்லை. அவரின் பந்தை மட்டுமே எதிர்கொள்ளப்போகிறோம். எனவே யார் வந்தாலும் எங்களுக்கு கவலையில்லை எனக்கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











