
4வது டெஸ்ட் போட்டி
இரு அணிகளும் மோதும் 4வது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று மதியம் 3 மணிக்கு தொடங்கவுள்ளது. 3வது டெஸ்டில் இந்திய அணியை, இங்கிலாந்து பவுலர்கள் புரட்டிப்போட்டது தான் தற்போது வரை இந்திய ரசிகர்களுக்கு பெரும் கவலையாக உள்ளது. குறிப்பாக கடந்த 3 டெஸ்ட் போட்டியிலுமே இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசை கவலை அளிக்கும் விதமாக உள்ளதால், ஓவல் டெஸ்டிலும் தோல்வியே கிடைக்க வாய்ப்புள்ளதாக சிலர் தெரிவித்து வருகின்றனர்.

ப்ளேயிங் 11ல் மாற்றம்
இந்நிலையில் எப்படியாவது 4வது டெஸ்டில் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற காரணத்தினால், இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்படவுள்ளதாக தெரிகிறது. அதன்படி பவுலிங்கில் ரவிச்சந்திரன் அஸ்வின் அணிக்கு கொண்டு வரப்படுவார் என அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். எனினும் பேட்டிங்கில் என்ன மாற்றம் செய்வார்கள் என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது.

ரஹானே மீது விமர்சனம்
முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் மிக மோசமாக சொதப்பிய புஜாரா, விமர்சனங்களை சந்தித்தார். ஆனால் அவர் கடந்த டெஸ்ட் போட்டியின்போது சிறப்பாக விளையாடி நிம்மதியை கொடுத்துவிட்டார். முக்கியமான நேரத்தில் 91 ரன்கள் அடித்து தனது ஃபார்மை நிரூபித்தார். அதிலிருந்து அவருக்கு ஒருவித நிம்மதி கிடைத்திருக்கும். இதனால் அனைவரின் பார்வையும் தற்போது ரஹானேவின் பக்கம் திரும்பியுள்ளது.

ஜாகீர் காட்டம்
இந்நிலையில் ரஹானேவின் விவகாரம் குறித்து முன்னாள் வீரர் ஜாகீர் கான் கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இந்த தொடர் தற்போது முக்கியமான கட்டத்தை எட்டி உள்ளதால் அணி எவ்வாறு மீண்டு வர வேண்டும் என்பது குறித்து முடிவு செய்ய வேண்டியுள்ளது. இதனால் இந்த போட்டியில் நிச்சயம் மாற்றம் இருக்கும். நீங்கள் அணியில் வெகுகாலம் விளையாடி இருக்கலாம். ஆனால் உங்களது கடந்த கால சாதனைகள் மட்டுமே எப்போதும் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. தற்போதைய செயல்பாடும் அவசியம்.

எச்சரிக்கை
இதன் காரணமாக அணியில் மூத்த வீரர்களாக இருந்தாலும் இளம் வீரர்களுக்கு ஏற்ப சரியான போட்டி அளிப்பது முக்கியம். ஒரு அணியில் மூத்த வீரராக இருப்பது இளம் வீரர்களுக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டும். அதே வேளையில் அணியில் இருக்கக் கூடிய வாய்ப்பையும் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என ஜாகீர் கான் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











