மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் ஆண்டர்சன்-டெண்டுல்கர் கோப்பைக்கான நான்காவது டெஸ்ட் போட்டி ஜூலை 23 முதல் 27 வரை நடைபெறவுள்ளது. இந்த முக்கியமான போட்டிக்கு முன்னதாக, இந்திய அணி காயம் தொடர்பான பிரச்சனைகளால் கலக்கத்தில் உள்ளது. நான்கு இந்திய வீரர்கள் காயத்தில் சிக்கி உள்ளனர்.
ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி தற்போது 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. தொடரை சமன் செய்ய இந்திய அணிக்கு இந்த போட்டியில் வெற்றி பெறுவது அவசியமாகிறது.

நிதிஷ் குமார் ரெட்டி: இளம் ஆல்-ரவுண்டரான நிதிஷ் குமார் ரெட்டி, உடற்பயிற்சிக் கூடத்தில் ஏற்பட்ட முழங்கால் தசைநார் கிழிவு காரணமாக இந்த தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளார். இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
அர்ஷ்தீப் சிங்: இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங், வலைப்பயிற்சியின் போது பந்துவீசும் கையில் ஏற்பட்ட வெட்டுக் காயம் காரணமாக நான்காவது டெஸ்டில் பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது.
ஆகாஷ் தீப்: இரண்டாவது டெஸ்டில் சிறப்பாக பந்துவீசி 10 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆகாஷ் தீப், இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட வலியால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் அவரும் இந்த போட்டியில் விளையாடுவது சந்தேகத்திற்கிடமாகியுள்ளது.
ரிஷப் பந்த்: இந்திய அணியின் முதல் தேர்வு விக்கெட் கீப்பரான ரிஷப் பந்திற்கு, லார்ட்ஸ் டெஸ்டின் போது விரலில் காயம் ஏற்பட்டது. அவர் முழுமையாக குணமடையாத பட்சத்தில், விக்கெட் கீப்பராக துருவ் ஜுரெல் களமிறங்க வாய்ப்புள்ளது.
இங்கிலாந்து அணியிலும் ஒரு வீரருக்கு காயம் ஏற்பட்டு விலகி உள்ளார். இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஷோயப் பஷீர், விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக லியாம் டாசன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த தொடர்ச்சியான காயங்கள், நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் திட்டமிடலில் பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது. முக்கிய வீரர்கள் இல்லாத நிலையில், இந்திய அணி இந்த போட்டியை எப்படி எதிர்கொள்ளும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.