ராஞ்சி : நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பென் ஃபோக்ஸ் மற்றும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் நடந்து கொண்ட விதத்தால் கேப்டன் ரோஹித் சர்மா கோபமடைந்தார். அது நேரலையில் காட்டப்பட்டது. அந்த வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் ஆடி வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்து 353 ரன்கள் குவித்தது. அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி விக்கெட்களை இழந்து தடுமாறினாலும் ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்ததால் 200 ரன்களை கடந்தது.

ஜெய்ஸ்வால் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது தான் அந்த சம்பவம் நடந்தது. ராபின்சன் வீசிய பந்தை அடிக்க முயன்ற ஜெய்ஸ்வால் எட்ஜ் செய்தார். பந்து கீழே சென்ற போதும் இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பென் ஃபோக்ஸ் பந்தை கேட்ச் பிடித்தார். ஆனால், பந்து பிட்ச் ஆன பின் தான் அவர் கேட்ச் பிடித்து இருந்தார்.
அதை அறியாமல் பென் ஃபோக்ஸ் அது அவுட் என கொண்டாடினார். அவருடன் சேர்ந்து இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் சக வீரர்கள் விக்கெட் வீழ்ச்சியை கொண்டாடினர். ஆனால், அம்பயர் ரீப்ளே பார்த்த போது பந்து பிட்ச் ஆனது தெரிந்தது. இதை அடுத்து அவுட் இல்லை என அறிவிக்கப்பட்டது.
அப்போது ஏதோ அவுட் கொடுக்காமல் தங்களை ஏமாற்றியது போல இங்கிலாந்து அணி வீரர்கள் பாவனை செய்தார்கள். பென் ஸ்டோக்ஸ் தலையில் கை வைத்து சோகமாக நின்று இருந்தார். இதை அறையில் இருந்து பார்த்துக் கொண்டு இருந்த ரோஹித் சர்மா, கோபம் கொண்டார்.
அவுட்டே இல்லாத ஒன்றிற்கு விக்கெட் கீப்பர் அவுட் கேட்டு ஆர்ப்பரிப்பதும், அவுட் இல்லை என்ற உடன் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஏமாற்றப்பட்டது போல பாவனை செய்வதும் ரோஹித் சர்மாவுக்கு எரிச்சலை ஏற்படுத்திய நிலையில் அவர் அருகில் இருந்தவர்களிடம் சரியாக கேட்ச் பிடிக்கவில்லை என கேட்ச் பிடிப்பது போல சைகையில் செய்து காட்டி கோபத்தில் கத்தினார். அந்த வீடியோ தான் இணையத்தில் பரவி வருகிறது.