லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் 2 வீரர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. அதன்படி நிதீஷ் குமார் ரெட்டி காயம் காரணமாக விலகியுள்ள நிலையில், மீண்டும் ஷர்துல் தாக்கூர் சேர்க்கப்படலாம் என்றும், டாப் ஆர்டரில் கருண் நாயர் நீக்கப்பட்டு, சாய் சுதர்சனை கொண்டு வரவும் கம்பீர் முடிவு எடுத்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி நாளை மாலை மான்செஸ்டர் நகரில் தொடங்க உள்ளது. இதுவரை நடந்த 3 டெஸ்ட் போட்டிகளில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது. இந்த நிலையில் 4வது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக இரு அணிகளுக்கும் 8 நாட்கள் ஓய்வு அளிக்கப்பட்டது.

இதனைப் பயன்படுத்தி இந்திய வீரர்கள் சிறப்பாகக் கம்பேக் கொடுப்பார்கள் என்று ரசிகர்கள் நம்பினார்கள். ஆனால் இந்திய அணியின் இளம் ஆல்ரவுண்டர் நிதீஷ் குமார் ரெட்டி, ஆகாஷ் தீப் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகிய 3 பேரும் காயம் காரணமாக விலகி இருக்கின்றனர். இதில் நிதீஷ் குமார் ரெட்டி மொத்தமாக தொடரில் இருந்தே விலகி இருக்கிறார்.
இதனால் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படிக் கட்டமைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. நிதீஷ் குமார் ரெட்டி மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோரின் இடங்களுக்கு யார் கொண்டு வரப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் ஆகாஷ் தீப்-க்கு பதிலாக சிஎஸ்கே அணிக்காக ஆடிய அன்சுல் கம்போஜ் சேர்க்கப்பட வாய்ப்புகள் உள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.
இவரிடம் பேஸ் மற்றும் ஸ்விங் இருப்பதாக ஐபிஎல் தொடரின் போதே தோனி கூறி இருந்தார். இதனால் பிரசித் கிருஷ்ணாவுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகம்தான். அதுமட்டுமல்லாமல் அன்சுல் கம்போஜ் பயிற்சி போட்டியின் போது 5 விக்கெட்டுகளை சாய்த்திருந்தார். அதேபோல் நிதீஷ் குமார் ரெட்டியின் இடத்தில் ஷர்துல் தாக்கூரை மீண்டும் கொண்டு வர கம்பீர் முடிவு எடுத்திருப்பதாகப் பார்க்கப்படுகிறது.
முதல் டெஸ்ட் போட்டியில் ஷர்துல் தாக்கூருக்கு போதுமான அளவு பவுலிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் இம்முறை ஷர்துல் தாக்கூரை கொண்டு வர முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் டாப் ஆர்டரில் கருண் நாயரை நீக்கிவிட்டு, அந்த இடத்தில் தமிழக வீரர் சாய் சுதர்சன் சேர்க்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிகிறது.
ஏனென்றால் 6 இன்னிங்ஸில் ஒரு அரைசதம் கூட கருண் நாயர் சேர்க்கவில்லை. சிறந்த தொடக்கம் கிடைத்த போதும், அதனை கருண் நாயர் பயன்படுத்தி கொள்வதில்லை. இதனால் நம்பர் 4ல் வரும் கேப்டன் சுப்மன் கில் கூடுதல் பதற்றத்துடன் விளையாட வேண்டிய சூழல் இருக்கிறது. சாய் சுதர்சனை கொண்டு வரும் பட்சத்தில், அது இந்திய அணி நீண்ட கால நோக்கத்திற்கும் சரியாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.