
ஓப்பனிங்கே அதிர்ச்சி
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு இந்த போட்டியிலும் தொடக்கத்திலேயே வரிசையாக விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கியது. முதலில் ரோஹித் ஷர்மா, க்றிஸ் வோக்ஸின் பவுன்ஸ் பந்தில் எட்ஜ் ஆகி 11 ரன்களில் வெளியேறினார். பிறகு, 44 பந்துகளை சந்தித்த லோகேஷ் ராகுல், 3 பவுண்டரிகளுடன் 17 ரன்கள் அடித்திருந்த நிலையில் ராபின்சன் ஓவரில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார்.

மிடில் ஆர்டர் தோல்வி
கடந்த போட்டியில் 91 ரன்கள் அடித்து நம்பிக்கை அளித்திருந்த புஜாரா, இந்த போட்டியில் 31 பந்துகளை சந்தித்து 4 ரன்கள் மட்டும் எடுத்து வெளியேறினார். அவர் ஆண்டர்சன் பந்தில் எட்ஜ் ஆகி கீப்பர் கேட்ச் கொடுத்து வெளியேறினார். முதன் முறையாக 5வது வீரராக களமிறக்கப்பட்ட ஜடேஜா, 10 ரன்களில் வெளியேறினார். இதன் பிறகு ஒற்றையாளாக போராடி வந்த கேப்டன் விராட் கோலி அரைசதம் அடித்தார். எனினும் 50 ரன்னில் ஓலே ராபின்சன் ஓவரில் எட்ஜாகி வெளியேறினார். பிறகு துணை கேப்டன் ரகானே 14 ரன்களிலும், ரிஷப் பண்ட் 9 ரன்களிலும் வெளியேற, இந்தியா 127 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து மோசமான நிலைக்கு சென்றது.

ஷர்துல் தாக்கூர்
எப்படியும் 130 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட் ஆகிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த எண்ணத்தை மாற்றி அமைத்தார் இளம் வீரர் ஷர்துல் தாகூர். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களே தடுமாறிய நிலையில் ஷர்துல் தாக்கூர் நாளாபுறமும் பந்தை அடித்து துவம்சம் செய்தார். இதனால் இங்கிலாந்து பவுலர்கள் விழிப்பிதுங்கினர்.

காட்டடி
36 பந்துகளை சந்தித்த ஷர்துல் 57 ரன்களை விளாசினார். இதில், 3 சிக்ஸர்களும், 7 பவுண்டரிகளும் அடங்கும். 8வது விக்கெட்டுக்கு ஷர்துல் தாகூர் - உமேஷ் யாதவ் பார்ட்னாட்ஷிப் 63 ரன்கள் சேர்த்தது. இதனால் 130 ரன்களுக்குள் சுருண்டிருக்க வேண்டிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 191 ரன்கள் எடுத்தது. அதிரடி ஆட்டத்தால் ஷர்துல் தாக்கூர் புதிய சாதனை ஒன்றையும் படைத்தார்.

அதிவேகமாக அரைசதம்
டெஸ்ட் போட்டிகளில், அதிவேகமாக அரைசதம் அடித்த 2வது இந்திய வீரர் எனும் பெருமையை ஷர்துல் பெற்றுள்ளார். முதல் இடத்தில், இந்திய அணியின் முன்னாள் வீரர் கபில் தேவ் உள்ளார். இவர் 30 பந்துகளில் அரைசதம் அடித்ததே, இதுவரை முறியடிக்கப்படாத சாதனையாக உள்ளது. 32 பந்துகளில் அரைசதம் அடித்திருந்த சேவாக்கை முந்தி ஷர்துல் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதனால் அவரை நம்பிக்கை நாயகனாக ட்விட்டரில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

கொண்டாடும் ரசிகர்கள்
கிரிக்கெட்டில் ஒரு சில வீரர்களுக்கு மட்டுமே, ரசிகர்கள் பட்டப்பெயர்கள் சூட்டுவார்கள். அந்தவகையில் ஷர்துல் தாக்கூரை ' தி லார்ட்' என அழைக்க தொடங்கியுள்ளனர். மேலும் இனி இந்திய அணியில் ஹர்த்திக் பாண்ட்யாவின் தேவை இருக்காது, ஷர்துலே போதும். லோயர் ஆர்டரில் ஒரு அதிரடிக்காரன் கிடைத்துவிட்டார். ஷர்துலின் ஆட்டத்தை பார்த்து நடுவர்களே வியந்துவிட்டனர் என மீம்ஸ் மூலமாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications