ராஞ்சி : இந்தியா - இங்கிலாந்து அணிகள் ஆடி வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியன் பேட்டிங் பரிதாப நிலையில் உள்ளது. இதற்கு காரணமே இங்கிலாந்து அணி பவுலிங்கில் வகுத்த மாரத்தான் பவுலிங் வியூகம் தான். எந்த பவுலர் இந்திய வீரர்களை அச்சுறுத்துகிறாரோ அந்த பவுலரை இடைவிடாமல் தொடர்ந்து பந்து வீசச் செய்ததே இங்கிலாந்து அணியின் ஆதிக்கத்துக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
இந்த டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகளில் முடிவில் இந்தியா 2 - 1 என முன்னிலையில் உள்ளது. நான்காவது போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வி அடைந்தால் தொடரை இழக்க நேரிடும். இந்த நிலையில், ஸ்பின் பந்துவீச்சுக்கு சாதகமான நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அதிரடி பவுலிங் திட்டம் ஒன்றை வகுத்தார்.

அந்த அணியில் இருந்த இரண்டு இளம் ஸ்பின்னர்களான சோயப் பஷீர் மற்றும் டாம் ஹார்ட்லி ஆகியோரால் அதிக ஓவர்கள் வீச முடியும் என்ற நிலையில் அந்த திட்டமும் அவர்களை சுற்றியே அமைந்தது. சோயப் பஷீர் பந்துவீச்சில் இந்திய வீரர்கள் திணறுவதை புரிந்து கொண்ட பென் ஸ்டோக்ஸ் அவரை தொடர்ந்து பந்து வீசச் செய்தார். அவருக்கு ஓய்வே கொடுக்கவில்லை. இளம் வீரர் என்பதால் அவரும் ஓய்வை எதிர்பார்க்காமல் தொடர்ந்து பந்து வீசினார்.
ஒரு முனையில் சோயப் பஷீர் தொடர்ந்து பந்து வீச, மறுமுனையில் மற்ற பந்துவீச்சாளர்கள் சுழற்சி முறையில் பந்து வீசினர். இடையே சர்பராஸ் கான், டாம் ஹார்ட்லி பந்துவீச்சில் திணறுவதை பார்த்த பென் ஸ்டோக்ஸ், அவர் களத்தில் இருந்த வரைக்கும் தொடர்ந்து டாம் ஹார்ட்லியை ஒரு முனையில் வீசச் செய்தார். அதனால் அவர் விக்கெட்டும் கிடைத்தது. இப்படி இந்திய வீரர்களுக்கு சிறிய வாய்ப்பு கூட கொடுக்காமல் அச்சுறுத்தியதால் விக்கெட்கள் வீழ்ந்த வண்ணம் இருந்தது.
சோயப் பஷீர் மாரத்தான் போல தொடர்ந்து 31 ஓவர்கள் வீசினார். டாம் ஹார்ட்லி 19 ஓவர்கள் வீசினார். இந்திய அணி ஆடிய 73 ஓவர்களில் இவர்கள் இருவரே 50 ஓவர்களை வீசி இருந்தனர். இந்திய ஆடுகளத்தின் ஸ்பின் பிட்ச்சை, இந்தியாவை விட என்கனி சிறப்பாக பயன்படுத்தியதால் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறது இந்திய அணி. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 353 ரன்கள் குவித்த நிலையில் அந்த அணி தற்போது 134 ரன்கள் முன்னிலையில் உள்ளது.