ராஞ்சி : இந்தியா - இங்கிலாந்து அணிகள் ஆடி வரும் நான்காவது டெஸ்ட் போட்டி இங்கிலாந்து அணிக்கு சாதகமாக மாறி உள்ளது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் பந்துவீச்சில் தடுமாறி அதிக ரன்களை விட்டுக் கொடுத்தது. அடுத்து பேட்டிங்கிலும் மேல் வரிசையில் நல்ல கூட்டணி கிடைத்தும் இடையில் விக்கெட்களை இழந்து தவித்து வருகிறது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி துவக்கத்தில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்களை இழந்தது. ஆகாஷ்தீப் முதல் 3 விக்கெட்களை சாய்த்தார். முதல் நாள் உணவு இடைவேளைக்குள் இங்கிலாந்து அணி 112 ரன்களுக்கு 5 விக்கெட்கள் இழந்து இருந்தது. அதன் பின் பிட்ச் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக மாறிய நிலையில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் நிதான ஆட்டம் ஆடி சதம் அடித்தார். பென் ஃபோக்ஸ் அவருக்கு ஒத்துழைத்து விக்கெட் வீழ்ச்சியை தடுத்தார். அடுத்து ஒன்பதாம் வரிசை பேட்ஸ்மேன் ஒல்லி ராபின்சன் அரை சதம் அடித்தார்.

இதை அடுத்து முதல் இன்னிங்க்ஸில் 353 ரன்கள் குவித்தது இங்கிலாந்து அணி. அடுத்து முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங் செய்த இந்திய அணியில் ஜெய்ஸ்வால் மட்டுமே ஒரு பக்கம் நின்று ரன் குவிக்க மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் ஜெய்ஸ்வால் 73 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 161 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்தது.
இந்திய அணியின் இந்த இக்கட்டான நிலைக்கு காரணம், டாஸில் இந்தியா தோற்றது தான். ஆம், இந்த டெஸ்ட் தொடரில் இதுவரை நடந்த முதல் மூன்று போட்டிகளிலும் எந்த அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்து ஆடியதோ அந்த அணியே வெற்றி பெற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து, பின் போட்டியிலும் வெற்றி பெற்றது. அடுத்த இரண்டு போட்டிகளில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. அந்த இரண்டு போட்டிகளிலும் இந்தியா வெற்றி வென்றது. தற்போது நான்காவது போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த நிலையில், அந்த அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்தப் போட்டியில் இந்தியா வெல்வது கடினமான ஒன்றாகவே இருக்கும்.