திணறிய இந்திய பந்துவீச்சு
மூன்றாம் நாள் முடிவில் 114 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்து இருந்தது. இங்கிலாந்து. ரூட் மற்றும் குக் இணை நான்காம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. இருவரும் நிதான ஆட்டத்தை கடைபிடித்தனர். இந்திய பந்துவீச்சாளர்கள் இவர்களை வெளியேற்ற முடியாமல் திணறினர்.
குக் சாதனை சதம்
அலஸ்டர் குக் தன் கடைசி போட்டியில், கடைசி இன்னிங்க்ஸில் சதம் அடித்து சாதனை செய்தார். இவர் தன் முதல் மற்றும் கடைசி போட்டியில் இரண்டு இன்னிங்க்ஸிலும் 50 ரன்களுக்கும் மேல் அடித்த வகையில் ப்ரூஸ் மிட்செல் 69 வருடத்துக்கு முன் செய்த சாதனையை மீண்டும் செய்துள்ளார்.
காப்பாற்றிய விஹாரி
மறுபுறம் ஜோ ரூட்டும் சதம் அடிக்க, இங்கிலாந்து அணியின் முன்னிலை மளமளவென அதிகரித்தது. மூன்றாவது விக்கெட்டுக்கு இந்த இணை 259 ரன்கள் குவித்தது. ஹனுமா விஹாரி ஒரே ஓவரில் இவர்கள் இருவரையும் அடுத்தடுத்து வெளியேற்றினார். அடுத்து வேகமாக ரன் குவிப்பதில் ஈடுபட்ட மற்ற பேட்ஸ்மேன்கள், சொற்ப ரன்களே எடுத்தாலும், முன்னிலை அதிகரித்தது. இங்கிலாந்து 423 ரன்களுக்கு 8 விக்கெட் இழந்த நிலையில் டிக்ளேர் செய்தது.
இந்தியா மீண்டும் சோகம்
அடுத்து பேட்டிங் துவங்கிய இந்தியாவில் வழக்கம் போல தவான் 1, புஜாரா 0 என வெளியேறினர். கோலி ஏதாவது செய்வார் என எதிர்பார்த்த நிலையில், சந்தித்த முதல் பந்திலேயே விக்கெட்கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இந்திய 58க்கு 3 விக்கெட்கள் இழந்து தோல்வியை தவிர்க்குமா என்ற பரிதாப நிலையில் இருக்கிறது. ரஹானே, ராகுல் களத்தில் நிற்கின்றனர். இதில் ராகுல் 51 பந்துகளில் 46 ரன்கள் அடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.