தரம்சாலா : இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோத உள்ள ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு சாதகமாக வானிலை இருக்கும் என தகவல் வெளியான நிலையில், இந்தியா அந்தப் போட்டியில் வெல்ல தனது ஆயுதத்தை இறக்கி இருக்கிறது.
இந்த டெஸ்ட் தொடரில் இதுவரை நடந்த நான்கு போட்டிகளிலும் பேட்டிங் - பந்துவீச்சுக்கு சரி சமமான வாய்ப்பு இருந்தது. பொதுவாக இந்தியாவில் நடக்கும் டெஸ்ட் போட்டிகள் என்றாலே ஸ்பின் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் பிட்ச்கள் மட்டுமே அமைக்கப்படும் என்ற விமர்சனம் எழும். ஆனால், இந்த முறை அப்படி நடக்கவில்லை. எந்தப் போட்டியிலும் முற்றிலும் ஸ்பின் மட்டுமே வேலை செய்யும் அளவுக்கு பிட்ச் தயார் செய்யப்படவில்லை.

இந்த நிலையில் ஐந்தாவது டெஸ்ட் போட்டி நடக்க இருக்கும் தரம்சாலாவில் வானிலை இங்கிலாந்து அணிக்கு சாதகமாக உள்ளது. அங்கே பனியின் காரணமாக மைனஸ் 4 டிகிரி செல்சியஸ் வரை செல்வதாக வானிலை அறிக்கை வெளியாகி உள்ளது. வானிலை இங்கிலாந்து அணிக்கு சாதகமாக இருந்தாலும் பிட்ச் இந்தியாவுக்கு சாதகமாக அமைக்க முடிவு செய்து இருக்கிறது பிசிசிஐ.
அதன் படி இந்த டெஸ்ட் தொடரில் முதன்முறையாக முற்றிலும் ஸ்பின் பந்துவீச்சுக்கு சாதகமான பிட்ச் அமைக்கப்பட உள்ளது. இந்திய அணியின் அனுபவ ஸ்பின்னர்கள் அஸ்வின், ரவீந்திர ஜடேஜாவை வைத்து இங்கிலாந்து அணியை வீழ்த்த திட்டமிட்டே இப்படி ஒரு பிட்ச் தயாரிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களுடன் குல்தீப் யாதவ்வும் விக்கெட் வேட்டை நடத்துவார் என எதிர்பார்க்கலாம்.
என்னதான் வானிலை இங்கிலாந்து அணிக்கு சாதகமாக இருந்தாலும், பிட்ச் இந்தியாவுக்கு சாதகமாக அமைக்கப்பட உள்ளது. அதே சமயம், அனுபவம் இல்லாத இங்கிலாந்து ஸ்பின்னர்களை சமாளிக்க வேண்டிய பொறுப்பு இந்திய பேட்ஸ்மேன்களுக்கு உள்ளது. ஐந்தாவது டெஸ்ட் மார்ச் 7 அன்று துவங்க உள்ளது. ஏற்கனவே இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரை 3 - 1 என்ற கணக்கில் இழந்து விட்டது. எனினும், ஆறுதல் வெற்றி பெற அந்த அணி போராடும்.