
பிரச்னை என்ன?
ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த இந்த போட்டி ரத்து செய்யப்படுவதற்கு முக்கிய காரணம் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தான். அவரின் மூலம் தான் இந்திய அணியில் கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளது. இந்திய அணியினர் தங்கியிருந்த ஓட்டலில் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் ரவிசாஸ்திரி - கேப்டன் கோலி உள்ளிட்ட அனைவரும் கலந்துக்கொண்டுள்ளனர்.

கொரோனா எப்படி பரவியது
இந்த நிகழ்ச்சிகாக பயோ பபுள் விதிமுறைகளை மீறி அனைவரும் சென்றுள்ளனர். இதற்காக இந்திய கிரிக்கெட் கவுன்சிலிடமோ, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடமோ எந்தவித அனுமதியையும் வாங்கவில்லை என தெரிகிறது. இதன் காரணமாக தான், வெளியுலக மக்களிடம் இருந்து சாஸ்திரிக்கு கொரோனா ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவரிடம் இருந்து பவுலிங் பயிற்சியாளர், ஃபீல்டிங் பயிற்சியாளர் என மேலும் 3 பேருக்கு பரவியிருக்கிறது.

ஆட்டம் ரத்து
தொடர்ந்து கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வந்ததால் இரு அணிகளுக்கு இடையே இன்று மதியம் தொடங்கவிருந்த 5வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். இந்திய அணி தங்களது வீரர்களை களமிறக்க தயாராக இல்லை என தெரிவித்துவிட்டது.

14 வருட காத்திருப்பு
ரவி சாஸ்திரியால் போட்டி ரத்து செய்யப்பட்டாலும், அதில் ஒரு நன்மை உள்ளது. இந்த தொடரில் இதுவரை நடைபெற்றுள்ள 4 போட்டிகளில் இந்திய அணி 2 - 1 என முன்னிலை வகிக்கிறது. எனவே ஒருவேளை போட்டி முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுவிட்டு, இந்திய அணி வெற்றி பெற்றதாக அறிவித்துவிட்டால், இந்திய அணியின் 14 வருட காத்திருப்பு முடிவுக்கு வரும். இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி கடைசியாக 2007ம் ஆண்டு தான் டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது. ராகுல் டிராவிட் தலைமையில் அந்த தொடரை 1 - 0 என இந்தியா வென்றிருந்தது.

காத்திருக்கும் ரசிகர்கள்
ஆனால் இந்திய அணி தான் இந்த தொடரில் இருந்து வெளியேற விருப்பம் தெரிவித்து இருப்பதால், தொடர் சமனில் முடிவடைந்தது என்று அறிவிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. எனவே இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகாக ரசிகர்கள் காத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications