
5வது டெஸ்ட் போட்டி
வெற்றியாளர் யார் என்பதை முடிவு செய்யும் கடைசி மற்றும் 5வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்கவுள்ளது. இந்த போட்டி மான்செஸ்டர் நகரில் உள்ள எமிரெட்ஸ் ஓல்ட் ட்ராஃபர்ட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 3வது வெற்றியை பதிவு செய்து தொடரை கைப்பற்றும் எண்ணத்துடன் இந்திய அணியும், தொடரை சமன் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இங்கிலாந்து அணியும் முனைப்புடன் உள்ளதால், இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இந்திய அணியில் கொரோனா
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 5வது டெஸ்ட் போட்டி நடைபெறுமா என்பதிலேயே குழப்பம் நீடிக்கிறது. இதற்கு காரணம் இந்திய அணிக்குள் கொரோனா பரவியது தான். 4வது டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பவுலிங் பயிற்சியாளர் பாரத் அருண், ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோருக்கு கொரோனா உறுதியானது. இதனையடுத்து அவர்கள் 3 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

4வது கொரோனா பாதிப்பு
இப்படி இருக்க இந்திய அணியில் மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பயிற்சியாளர்களுக்கு கொரோனா உறுதியானதை அடுத்து இந்திய வீரர்களுக்கும், ஊழியர்களுக்கும் தொடர்ந்து பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில் இன்று எடுக்கப்பட்ட பரிசோதனையில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

கடைசி போட்டி ரத்து?
இதனையடுத்து இந்திய அணி வீரர்களுக்கும் பயோ பபுள் பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்றைய நாள் பயிற்சிக்கு கூட யாரையும் வெளியே வர அனுமதிக்கப்படவில்லை. கொரோனா அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதால், நாளை நடைபெறும் 5வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று இரவு வெளியாகலாம்.

எப்படி பரவியது கொரோனா
இந்திய அணி தங்கியிருந்த ஓட்டலில் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. இதில் ரவி சாஸ்திரி மற்றும் கோலி உள்ளிட்ட இந்திய அணியினர் கலந்துக்கொண்டுள்ளனர். அனுமதி பெறப்படாத இந்த கூட்டத்தில் பங்கேற்றதே கொரோனா பரவ காரணம் எனக்கூறப்படுகிறது. இதனால் கோலி மீதும் ரவி சாஸ்திரி மீதும் பிசிசிஐ கடும் கோபத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











