
5வது டெஸ்ட் போட்டி
வெற்றியாளர் யார் என்பதை முடிவு செய்யும் கடைசி மற்றும் 5வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கவுள்ளது. இந்த போட்டி மான்செஸ்டர் நகரில் உள்ள எமிரெட்ஸ் ஓல்ட் ட்ராஃபர்ட் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று மதியம் 3 மணியளவில் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இங்கிலாந்து அணி தொடரை சமன் செய்வதற்கும், இந்திய அணி தொடரை கைப்பற்றுவதற்கு மும்முரம் காட்டுவதால் போட்டி மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இந்திய அணியில் கொரோனா
ஆனால் இரு அணிகளுக்கும் இடையேயான 5வது டெஸ்ட் போட்டி நடைபெறுமா என்பதிலேயே சிக்கல் நீடித்து வந்தது. இதற்கு காரணம் இந்திய அணிக்குள் கொரோனா பரவியது தான். 4வது டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பவுலிங் பயிற்சியாளர் பாரத் அருண், ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோருக்கு கொரோனா உறுதியானது. இதனையடுத்து அவர்கள் 3 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே நேற்று முன் தினம் அணி ஊழியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.

4வது கொரோனா பாதிப்பு
இந்நிலையில் 5வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் அதிகம் இருப்பதன் காரணமாக இந்திய அணி வீரர்களை போட்டிக்கு களமிறக்க தயாராக இல்லை என்றும், போட்டியை நிறுத்திக்கொள்ளலாம் என தெரிவித்து விட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

ரசிகர்கள் குழப்பம்
இந்த தொடரில் இந்திய அணி 2 - 1 என முன்னிலை வகித்து வருகிறது. எனினும் இந்த போட்டி ஒத்திவைக்கப்பட்டு மற்றொரு நாளில் தொடங்கப்படுமா அல்லது முற்றிலும் ரத்து செய்யப்பட்டு இந்திய அணி வென்றுவிட்டதாக அறிவிக்கப்படுமா என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











