தரம்சாலா : இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதி வரும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இதுவரை எந்த அணியும் டெஸ்ட் போட்டிகளில் செய்யாத சாதனை ஒன்றை இந்திய அணி செய்து கிரிக்கெட் உலகை வியக்க வைத்துள்ளது.
இந்த தொடரில் நான்கு போட்டிகளின் முடிவில் இந்திய அணி 3 -1 என தொடரைக் கைப்பற்றி இருந்தது. இந்த நிலையில் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் எந்த அழுத்தமும் இன்றி ஆடிய இந்திய வீரர்கள் ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 218 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது.

அடுத்து பேட்டிங் ஆடிய இந்திய அணியில் ஜெய்ஸ்வால் 57, ரோஹித் சர்மா 103, சுப்மன் கில் 110 ரன்கள் குவித்தனர். இவர்கள் மூவருமே சிக்ஸர் அடித்தனர். ஜெய்ஸ்வால் 3 சிக்ஸர்களும், ரோஹித் சர்மா 3 சிக்ஸர்களும், சுப்மன் கில் 5 சிக்ஸர்களும் அடித்தனர். மூவருமே 3 சிக்ஸர்கள் அல்லது அதற்கும் மேல் அடித்து இருந்தனர். இது கிரிக்கெட் உலகில் இதுவரை எந்த அணியும் செய்யாத சாதனை ஆகும்.
ஒரே டெஸ்ட் இன்னிங்ஸில் ஒரு அணியின் முதல் மூன்று பேட்ஸ்மேன்களும் தலா 3 சிக்ஸ் அல்லது அதற்கும் மேல் அடிப்பது இதுவே முதல் முறை. 1877இல் முதல் டெஸ்ட் போட்டி நடந்தது முதல் இதுவரை எந்தப் போட்டியிலும் இந்த சாதனை நடைபெறவில்லை. இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டம் ஆடும் உத்திக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அணியும் அதிரடியாக ரன் குவித்து வரும் நிலையில் அதிக சிக்ஸர்கள் அடிக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இந்த சாதனை அமைந்தது.
இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்கள் இழந்து இருந்த போது 279 ரன்கள் குவித்து இருந்தது. அடுத்து சர்ஃபராஸ் கான், தேவ்தத் படிக்கல் சிறப்பாக பேட்டிங் ஆடினர். சர்ஃபராஸ் கான் தன் பங்கிற்கு அதிரடி ஆட்டம் ஆடி அரைசதம் கடந்தார். இங்கிலாந்து அணி ஐந்தாவது டெஸ்ட்டில் வெல்வது கடினமாக மாறி உள்ளது.