லண்டன்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் நாளான இன்று (வியாழக்கிழமை), லண்டன், கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. ஆனால், இந்த முக்கிய போட்டியில் மழை இந்திய அணியின் வில்லனாக மாறும் என அஞ்சப்படுகிறது.
தொடரை சமன் செய்ய இந்திய அணிக்கு இதுவே கடைசி வாய்ப்பாக இருப்பதால், இந்தப் போட்டி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. தற்போது இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. மான்செஸ்டரில் நடந்த நான்காவது டெஸ்ட் போட்டியை இந்திய அணி, சுப்மன் கில், ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரின் அபாரமான சதங்களின் உதவியுடன் போராடி டிரா செய்தது.

ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ள ஐந்தாவது டெஸ்ட்டை இந்திய அணி வென்றே ஆக வேண்டும் என்ற நிலை உள்ளது. இந்த சூழ்நிலையில் வானிலை அறிக்கை இந்திய அணியின் நோக்கத்துக்கு எதிராக அமைந்துள்ளது.
இன்று போட்டியின் முதல் நாள் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பும், ஆட்ட நேரத்திலும் லண்டனில் கனமழை பெய்ய 80% வாய்ப்பு இருப்பதாக இங்கிலாந்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இடிமின்னலுடன் கூடிய புயலுக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், டாஸ் தாமதமாவதற்கும், முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்படுவதற்கும் அதிக வாய்ப்புள்ளது.
நாள் முழுவதும் மழைப்பொழிவிற்கான வாய்ப்பு 70% முதல் 80% வரை நீடிக்கும் என்றும், ஆட்டத்தின் இறுதி நேரத்தில் மட்டுமே வானிலை சற்று சீரடைய வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. அக்யூவெதர் தளத்தின் அறிக்கையின்படி, மதிய நேரத்திலும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இந்தத் தொடரை 2-2 என சமன் செய்ய இந்திய அணிக்கு இந்தப் போட்டியில் வெற்றி பெறுவது அவசியமாகும். ஆனால், வானிலை முதல் நாள் ஆட்டத்திற்குச் சாதகமாக இருக்குமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையேயான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது, லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 4 வரை நடைபெறுகிறது. இந்தப் போட்டியின் நேரடி ஒளிபரப்பை சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கிலும், லைவ் ஸ்ட்ரீமிங்கை ஜியோ ஹாட்ஸ்டாரிலும் ரசிகர்கள் காணலாம். இந்திய நேரப்படி டாஸ் மதியம் 3:00 மணிக்கும், போட்டி பிற்பகல் 3:30 மணிக்கும் தொடங்கும்.