தரம்சாலா : இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோத உள்ள ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு பாதகமான சூழ்நிலை இருக்கும் என்பதால் அந்தப் போட்டியில் இந்தியா எளிதாக வெல்ல முடியாது என கூறப்படுகிறது.
அதற்கு காரணம் ஐந்தாவது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ள தரம்சாலா மைதானத்தில் நிலவும் வானிலை தான். அங்கு தற்போது 1 டிகிரி முதல் - 5 டிகிரி வரை வானிலை இருப்பதாக கூறப்படுகிறது. இது கிட்டத்தட்ட இங்கிலாந்து வீரர்களுக்கு ஏற்ற வானிலை ஆகும். அதே சமயம், இந்திய வீரர்களுக்கு இது போன்ற சூழ்நிலையில் பேட்டிங் மற்றும் பவுலிங் செய்வது கடினமாக இருக்கும்.

இந்த டெஸ்ட் தொடரின் முதல் நான்கு போட்டிகளின் முடிவில் இந்திய அணி 3 - 1 என தொடரை கைப்பற்றி விட்டது. ஆனாலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் கீழ் ஒவ்வொரு போட்டியின் வெற்றியும் முக்கியம் என்பதால் தரம்சாலாவில் நடைபெறும் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற போராடும்.
ஆனால்; சூழ்நிலைகள் இந்திய அணிக்கு சாதகமாக இருக்காது என கணிக்கப்பட்டு இருக்கிறது. அதிக பனியின் காரணமாக சுழற் பந்துவீச்சு பெரிய அளவில் எடுபடாது எனவும் கூறப்படுகிறது. எனவே, இந்திய அணி நிச்சயம் பும்ராவை ஐந்தாவது போட்டியில் களமிறக்கும். அவருடன் முகமது சிராஜ் மற்றும் ஆகாஷ்தீப் என இரண்டு வேகப் பந்துவீச்சாளர்கள் அணியில் இடம் பெற வாய்ப்பு உள்ளது.
அப்படியே இங்கிலாந்து அணியை பார்த்தால், அந்த அணிக்கு இந்த சூழ்நிலை சாதகமானது. அவர்கள் நாட்டில் இது போன்ற சூழலில் தொடர்ந்து விளையாடி பழக்கப்பட்ட நிலையில் அவர்கள் தரம்சாலாவில் தங்களின் இயல்பான ஆட்டத்தை ஆட வாய்ப்பு உள்ளது. இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர்கள் ஆண்டர்சன், ராபின்சன் மற்றும் மார்க் உட் ஆகியோர் பந்துவீச்சில் இந்திய அணிக்கு அழுத்தம் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.