ராஞ்சி : இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இந்திய வீரர் ஆகாஷ்தீப், போட்டிக்கு முன் தன் தாயின் கால்களை தொட்டு வணங்கினார். இந்திய அணிக்காக அறிமுகமான மகனை வாஞ்சையோடு தலையை தொட்டு ஆசிர்வதித்தார் அவரது தாய். இது நெகிழ வைக்கும் சம்பவமாக இருந்தது.
அதன் பின் ஆகாஷ்தீப் போட்டியில் இங்கிலாந்து அணியின் முதல் 3 விக்கெட்களை வீழ்த்தினார். அவர் தாயிடம் ஆசிர்வாதம் வாங்கிய பின், 3 விக்கெட்களை வீழ்த்தியதை உணர்வுப்பூர்வமான விஷயமாகக் கருதி ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இந்தியா 2 - 1 என முன்னிலை பெற்று இருக்கிறது. நான்காவது டெஸ்ட் போட்டியில் வென்றால் தொடரைக் கைப்பற்றலாம் என்ற நிலையில் இந்திய அணி ஒரு அதிரடி முடிவை எடுத்தது. தொடர்ந்து மூன்று மாதங்களாக டெஸ்ட் போட்டிகளில் ஆடி வரும் வேகப் பந்துவீச்சாளர் பும்ராவுக்கு ஓய்வு அளித்து விட்டு, அவருக்கு பதிலாக அறிமுக வீரர் ஆகாஷ்தீப்பை களமிறக்கியது.
சமீபத்தில் நடந்த இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான போட்டிகளில், இந்தியா ஏ சார்பில் பங்கேற்ற ஆகாஷ்தீப் சிறப்பாக பந்து வீசி விக்கெட்களை அள்ளி இருந்தார். அதனால் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட், ஆகாஷ்தீப்புக்கு டெஸ்ட் அணி தொப்பியை வழங்கி அவரை வாழ்த்தினார். அப்போது அருகே அவரது குடும்பத்தினரும் இருந்தனர்.
தொப்பியை வாங்கிய ஆகாஷ்தீப் நேராக தன் தாயின் கால்களை தொட்டு வணங்கினார். அவரது தாய் அவரது தலையை தடவிக் கொடுத்து வாழ்த்தினார். அதன் பின் போட்டியில் 4வது ஓவரிலேயே ஆகாஷ்தீப் பந்துவீச்சில் ஸ்டம்ப்பு பறந்தது. ஆனால், அது நோ பால் என்பதால் ஏமாற்றம் அடைந்தார் ஆகாஷ்தீப். எனினும், இங்கிலாந்து அணியின் முதல் 3 விக்கெட்களை அவரே வீழ்த்தினார். அந்த வகையில் தன் தாயின் ஆசிர்வாதத்துடன் டெஸ்ட் கிரிக்கெட் கேரியரை சிறப்பாக துவக்கி இருக்கிறார் ஆகாஷ்தீப்.