ராஞ்சி : இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமான ஆகாஷ்தீப்புக்கு சக இந்திய வீரர்கள் மரியாதை அளித்த சம்பவம் ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. கேப்டன் ரோஹித் சர்மா, இளம் வீரர்களுக்கு முக்கியத்துவம் அளித்து நடப்பதை ரசிகர்கள் குறிப்பிட்டு பாராட்டினர்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் ஆகாஷ்தீப் வேகப் பந்துவீச்சாளராக அறிமுகம் ஆனார். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக பந்து வீசி வந்த அவர், இந்தியா ஏ அணியிலும் விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். இதை அடுத்து அவருக்கு போட்டியில் களமிறங்கும் வாய்ப்பு கிடைத்தது. தனது தேர்வை முதல் சில ஓவர்களிலேயே நிரூபித்தார்.

இங்கிலாந்து அணியின் முதல் 3 விக்கெட்களையும் வீழ்த்தி அசத்தினார் ஆகாஷ்தீப். முதல் நாள் ஆட்டத்தின் இடைவேளையின் போது இந்திய அணி 5 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தது. இடைவேளைக்காக இந்திய வீரர்கள் ஆடுகளத்தை விட்டு வெளியேறிய போது, 3 விக்கெட்கள் வீழ்த்திய ஆகாஷ்தீப்பை முன்னே செல்லுமாறு கூறினார் கேப்டன் ரோஹித் சர்மா.
அவருக்கு பின் மற்ற இந்திய வீரர்கள் செல்லுமாறு கூறினார். அதே போல, மற்ற வீரர்கள் ஆகாஷ்தீப்பை முன்னே செல்ல வைத்து அவருக்கு மரியாதை அளித்தனர். அதன் மூலம் ரசிகர்கள் கைதட்டல் மற்றும் பாராட்டு அவருக்குத் தான் கிடைக்க வேண்டும் என்பதை கேப்டன் ரோஹித் சர்மா உறுதி செய்தார். ரோஹித் சர்மாவின் இந்த செயலை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
இடைவேளை வரை முதல் நாள் ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி அதன் பின் சொதப்பியது. இங்கிலாந்து அணியின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனான ஜோ ரூட் அபார ஆட்டம் ஆடி சதம் அடித்தார். இதை அடுத்து முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் எடுத்துள்ளது. 112 ரன்களுக்கு 5 விக்கெட் என்ற நிலையில் இருந்து 302 ரன்களுக்கு 7 விக்கெட் என்ற நிலைக்கு சென்று இருக்கிறது இங்கிலாந்து அணி.