மும்பை : இந்திய அணி வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் சரியாக ரன் குவிக்காததால் டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். அவரை உள்ளூர் போட்டிகளில் ஆடுமாறு பிசிசிஐ சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், அவர் பொய்யான காரணத்தை கூறி உள்ளூர் டெஸ்ட் தொடரான ரஞ்சி ட்ராபியில் பங்கேற்காமல் தப்பி இருக்கிறார்.
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்ற அவர் முதல் இரண்டு போட்டிகளில் சரியாக ரன் குவிக்கவில்லை. அதற்கு முன் ஆடிய தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரிலும் ரன் குவிக்கவில்லை. தொடர்ந்து மோசமான ஷாட்கள் ஆடி தன் விக்கெட்டை பறிகொடுத்து வந்தார். இதை அடுத்து அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

ஆனால், தனக்கு முதுகு வலி இருப்பதாக அவர் கூறி வந்தார். தேசிய கிரிக்கெட் அகாடமி அவரை பரிசோதித்து பார்த்து விட்டு அவர் போட்டிகளில் பங்கேற்கலாம் என கூறி இருக்கிறது. அதனை அடுத்து அவரை மும்பை மாநில அணிக்காக ரஞ்சி ட்ராபி தொடரில் ஆடுமாறு பிசிசிஐ சார்பில் கூறப்பட்டது.
ஆனால், கடந்த இரண்டு போட்டிகளாக முதுகு வலியை காரணம் காட்டி அவர் ரஞ்சி ட்ராபி போட்டியில் பங்கேற்கவில்லை. அவர் 2024 ஐபிஎல் தொடரின் போது காயமின்றி இருக்க வேண்டும் என்ற மனநிலையில் தற்போது போட்டிகளில் ஆடாமல் ஓய்வு எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் ஊடகங்களில் வெளியாகி இருக்கும் நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் மீது பிசிசிஐ கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதே போன்ற தவறை செய்த இஷான் கிஷனின் பிசிசிஐ ஒப்பந்தத்தை இனி புதுப்பிக்கப் போவதில்லை என தகவல் வெளியாகி இருக்கும் நிலையில், அதே போல ஸ்ரேயாஸ் ஐயருக்கும் செய்ய வேண்டும் என்ற கருத்துக்கள் கூறப்பட்டு வருகிறது.
முன்னாள் வீரர் இர்பான் பதான், ஸ்ரேயாஸ் ஐயர் பெயரை குறிப்பிடாமல், இஷான் கிஷனுக்கு ஒரு நியாயம், ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஒரு நியாயமா? என சூசகமாக கேள்வி எழுப்பி இருக்கிறார். இது குறித்து இர்பான் பதான் வெளியிட்டுள்ள பதிவில், "தங்கள் உடலை பாதுகாப்பதாக கூறி உள்ளூர் போட்டிகளில் ஆடாமல் இருப்பதில் வெவ்வேறு வீரர்களுக்கு, வெவ்வேறு விதிகளா?" என அவர் பெயர்களை சொல்லாமல் கேள்வி எழுப்பி இருக்கிறார். ஸ்ரேயாஸ் ஐயர் மீதும் நடவடிக்கை எடுக்குமா பிசிசிஐ?