ராஞ்சி : ராஞ்சியில் நடைபெற்று வரும் இந்தியா - இங்கிலாந்து அணிகள் ஆடி வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் அம்பயரிடம் கோபமாக பேசினார் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ். மைதானத்தில் நடந்த ஒரு மாற்றம், இந்திய அணிக்கு சாதகமானது என அவர் அப்படி பேசி இருக்கலாம் என கூறப்படுகிறது. அதனால், போட்டியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. மூத்த வீரர் ஜோ ரூட் 122 ரன்கள் குவித்த நிலையில் அந்த அணி 353 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அடுத்து இந்திய அணி இரண்டாவது இன்னிங்க்ஸ் பேட்டிங் ஆடி வந்தது. ரோஹித் சர்மா 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த சுப்மன் கில் 38, ரஜத் படிதார் 17, ரவீந்திர ஜடேஜா 12 ரன்கள் எடுத்து வரிசையாக ஆட்டமிழந்தனர். இந்தியா 161 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து இருந்தது. அப்போது அம்பயரிடம் வாக்குவாதம் செய்தார் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ்.
அப்போது மதிய நேரம் என்றாலும் மைதானத்தில் போதிய வெளிச்சம் இல்லாமல் இருந்தது. அதனால், மைதான விளக்குகளை எரியச் செய்யுமாறு அம்பயர்கள் கூறினர். பொதுவாக இருட்டான நேரத்தில் பேட்ஸ்மேன்களால் சரியாக பேட்டிங் செய்ய முடியாது. அதே சமயம், பந்து வீசும் அணிக்கு விக்கெட் கிடைக்க அதிக வாய்ப்பு ஏற்படும்.
இந்த நிலையில் தான் மதிய நேரத்தில் கூடுதல் வெளிச்சம் ஏற்படுத்தி இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக அம்பயர் செயல்படுவதாக பென் ஸ்டோக்ஸ் கோபம் கொண்டு பேசி இருக்கலாம் என கூறப்படுகிறது. எனினும், இந்தப் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இரண்டாம் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் குவித்து இருந்தது. துருவ் ஜுரேல் மற்றும் குல்தீப் யாதவ் களத்தில் இருந்தனர்.