மும்பை : இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 4 - 1 என்ற கணக்கில் தொடரில் வெற்றி பெற்ற நிலையில் இங்கிலாந்து அணியின் தோல்விக்கு என்ன காரணம் என கடுமையான விமர்சனத்தை முன் வைத்து இருக்கிறார் முன்னாள் ஆஸ்திரேலிய சுழற் பந்துவீச்சாளர் பிராட் ஹாக்.
இந்த டெஸ்ட் தொடரில் அதிக ரன்களை குவித்து அசத்தினார் இந்திய அணியின் துவக்க வீரர் ஜெய்ஸ்வால். அவர் இரண்டு இரட்டை சதம் உட்பட 712 ரன்கள் குவித்தார். அவர் அதிரடி ஆட்டம் ஆடியதை குறித்து இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் பேசுகையில் ஜெய்ஸ்வால், இங்கிலாந்து அணியை பார்த்து அதிரடி ஆட்டம் ஆடுவதாக குறிப்பிட்டு இருந்தார்.

இத்தனைக்கும் இங்கிலாந்து அணி தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்த பின் அவர் அப்படி பேசி இருந்தார். இங்கிலாந்து அணி தாங்கள் மட்டுமே டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடி பேட்டிங் செய்யும் அணி என்ற தற்பெருமையில் இப்படி பேசி வருவதாக பலரும் பென் டக்கெட் பேச்சை விமர்சித்து இருந்தனர்.
இந்த நிலையில் ஐந்து போட்டிகளும் முடிந்துள்ள நிலையில், முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹாக் பேசுகையில், முதலில் உங்கள் வீட்டுக் கொல்லையை பாருங்கள். மற்றவர்களின் கொல்லையை பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. ஜெய்ஸ்வால் உங்கள் பந்துவீச்சை அடித்து துவம்சம் செய்து விட்டார். அவர் எப்படி ஆடிக் கொண்டு இருக்கிறாரோ அதே போலத் தான் ஆடினார் என்றார்.
மேலும், ஜெய்ஸ்வால் இங்கிலாந்து அணியைப் பார்த்து ஆடுகிறார் என நீங்கள் கூறினால், அதை இங்கிலாந்து அணியை நோக்கியும் சொல்ல முடியும். இங்கிலாந்து தனது அதிரடி ஆட்டத்தை சேவாக்கிடம் இருந்து கற்றுக் கொண்டது., இங்கிலாந்து தனது அதிரடி ஆட்டத்தை மேத்யூ ஹெய்டன் மற்றும் ஜஸ்டின் லாங்கரிடம் இருந்து கற்றுக் கொண்டது என எங்களாலும் சொல்ல முடியும். நீங்கள் எப்பொழுது மற்ற அணிகள் மீது கவனம் செலுத்துகிறீர்களோ அப்போதே நீங்கள் வீழ்த்தப்பட்டு விட்டீர்கள் என அர்த்தம் என பிராட் ஹாக் விமர்சித்து இருக்கிறார்.