மும்பை : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த நிலையில், தினேஷ் கார்த்திக், இந்திய பந்துவீச்சாளர்கள் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா செய்த தவறுகளை பட்டியலிட்டு கேப்டன் ரோஹித் சர்மாவை விமர்சனம் செய்து இருக்கிறார்.
இந்தப் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்க்ஸ் முடிவில் 190 ரன்கள் முன்னிலை பெற்று இருந்தது. முதல் இன்னிங்க்ஸில் பேட்டிங், பவுலிங் இரண்டுமே நன்றாகவே இருந்தது. ஆனால், இரண்டாவது இன்னிங்க்ஸ் பந்துவீச்சில் இருந்து சொதப்பல் தொடங்கியது. இங்கிலாந்து அணியின் விக்கெட்களை விரைவாக வீழ்த்த முடியவில்லை என்பதால் நம்பிக்கை இழந்து காணப்பட்ட இந்திய பவுலர்கள், குறிப்பாக அனுபவ ஸ்பின்னர்கள் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா தாக்குதல் பாணி ஃபீல்டிங் அமைக்காமல் ரன்களை கட்டுப்படுத்தும் நோக்கில் அதிக இடைவெளி விட்டு ஃபீல்டிங் நிற்க வைத்தனர். அதை கேப்டன் ரோஹித் சர்மாவும் மறுப்பு சொல்லாமல் ஏற்றுக் கொண்டார்.

அது மிகப் பெரிய தவறாக பார்க்கப்பட்டது. அதன் காரணமாக 250 ரன்களுக்குள் அடங்க வேண்டிய இங்கிலாந்து அணி 420 ரன்கள் குவித்து இந்திய அணிக்கு 231 ரன்கள் வெற்றி இலக்கை நிர்ணயம் செய்தது. நான்காவது இன்னிங்க்ஸில் இது போன்ற இலக்கை எட்டுவது கடினம் என்பதால் பேட்டிங்கில் மனம் தளர்ந்து போன இந்திய பேட்ஸ்மேன்கள் பெரிய போராட்டத்தை வெளிப்படுத்தவில்லை.
இந்த நிலையில், இந்திய அணியின் பவுலிங் மற்றும் ஃபீல்டிங் திட்டம் தான் தோல்விக்கு காரணம் என்று கூறி இருக்கிறார் தினேஷ் கார்த்திக். அது பற்றி அவர் பேசுகையில், "ரோஹித் சர்மா ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டில், அவரது அதிரடி பேட்டிங் போலவே, பந்து வீச்சிலும் அதிரடியாக செயல்பட வேண்டும். 9 மற்றும் 10வது இடத்தில் பேட்டிங் செய்யும் எதிரணி வீரரை எளிதாக சிங்கிள் எடுக்க விடக் கூடாது. அந்த இடத்தில் தான் நாம் பந்துவீச்சில் சறுக்கி விட்டோம்" என்றார் தினேஷ் கார்த்திக்.
மேலும், "இந்தியா நிச்சயம் நன்றாக பந்து வீசவில்லை. அடுத்த டெஸ்ட்டில் நிச்சயம் ரோஹித் சர்மா, பந்துவீச்சாளர்கள் நிறுத்தும் ஃபீல்டர்களை அப்படியே ஏற்றுக் கொள்ளக் கூடாது. பல சமயம் பந்துவீச்சாளர்கள் ரன் போகக் கூடாது என அளவுக்கு அதிகமாக தடுப்பாட்ட முறையில் ஃபீல்டிங் அமைக்கிறார்கள். அதற்கு பதிலாக தாக்குதல் பாணி ஃபீல்டிங் அமைக்க வேண்டும் என ரோஹித், பந்துவீச்சாளர்களுக்கு கூற வேண்டும்." என்றார் தினேஷ் கார்த்திக்.