லக்னோ : இந்தியா - இங்கிலாந்து மோதிய உலகக்கோப்பை லீக் போட்டியில் விராட் கோலி, ராகுல் போன்ற நம்பகமான வீரர்களே அணியை கை விட்டு போன போது, சூர்யகுமார் யாதவ் ஆடிய ஆட்டம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. அந்த அணி திட்டமிட்டது போலவே, இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் விக்கெட்களை பறிகொடுத்து சென்றார்கள்.

சுப்மன் கில் 9, கோலி 0, ஸ்ரேயாஸ் ஐயர் 4, ராகுல் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்தியா 31வது ஓவரில் 131 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து இக்கட்டான நிலையில் இருந்தது. அப்போது சூர்யகுமார் யாதவ் களமிறங்கினார்.
டி20 போட்டிகளில் அவர் இறங்கினால் ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள் எல்லோரும் பயத்துடனே அவரைப் பார்த்தார்கள். அவரது ஒருநாள் போட்டி ரெக்கார்டு அப்படி. ஒருநாள் போட்டிகளில் மிக மோசமான சராசரி வைத்துள்ளார் சூர்யகுமார் யாதவ். நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் கூட அவர் 2 ரன்களில் ரன் அவுட் ஆகி இருந்தார்.
இந்த நிலையில், அவர் இங்கிலாந்து அணிக்கு எதிராக 4 விக்கெட் இழந்த நிலையில் ஆட வந்த போது பலர் ஜடேஜாவை இறக்கி இருக்கலாம் எனக் கூறினார்கள். சூர்யகுமார் அதிரடி ஆட்டம் ஆடுகிறேன் என அவசரப்பட்டு விக்கெட்டை கொடுத்து விட்டு போய்விடுவார் என்பதே அவர்களின் பயம். ஆனால், சூர்யகுமார் மிக பொறுப்பான ஒரு இன்னிங்க்சை ஆடினார்.
தவறான பந்துகளை மட்டுமே பவுண்டரி அடித்தார். சிங்கிள் ரன்களை ஓடுவதில் ஆர்வம் காட்டினார். ரோஹித் சர்மா 87 ரன்கள் எடுத்து வெளியேறிய போது இந்தியா 164 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து இருந்தது. அடுத்து ஷமி, ஜடேஜா என வரிசையாக விக்கெட்கள் வீழ்ந்த போதும் சரியாக பந்துகளை தேர்வு செய்து ரன் சேர்த்தார் சூர்யகுமார்.
47 பந்துகளில் 49 ரன்கள் சேர்த்த அவர் ஆட்டமிழந்த போது இந்தியா 208 ரன்கள் சேர்த்து இருந்தது. அவர் இன்னும் சிறிது நேரம் நின்று ஆடி இருக்கலாம் என சிலர் கூறலாம். ஆனால், இந்த பிட்ச்சில் மிடில் ஓவர்களில் மற்ற விக்கெட்கள் எல்லாம் சரிந்த போது இத்தனை தூரம் அவர் ஆடி ரன் சேர்த்தது பாராட்டுக்குரியது.
இனியாவது சூர்யகுமார் யாதவை ஏன் அணியில் வைத்து இருக்கிறீர்கள் என திட்டாமல் இருந்தால் அதுவே போதும் என்பதே இந்த இன்னிங்க்ஸ் மூலம் சூர்யகுமார் கிரிக்கெட் உலகுக்கு கூறி உள்ள மெசேஜ்.
இந்தியா இந்தப் போட்டியில் 50 ஓவர்களில் 229 ரன்கள் சேர்த்த நிலையில், இங்கிலாந்து அணி 129 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் - அவுட் ஆனது. இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை பதிவு செய்தது.