
5வது டெஸ்ட்
இந்திய அணியில் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி உட்பட 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை. எனினும் கொரோனா அச்சுறுத்தல் அதிகம் இருப்பதால் வீரர்களை களத்திற்கு அனுப்ப விரும்பவில்லை எனக்கூறி பிசிசிஐ ஆட்டத்தை ரத்து செய்யுமாறு இங்கிலாந்து வாரியத்திடம் கோரியது. இதனையடுத்து ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

நீடிக்கும் குழப்பம்
எனினும் தொடரின் வெற்றியாளர் யார் என்பது குறித்து இன்னும் முடிவு எட்டப்படாமலேயே உள்ளது. இந்த போட்டியை வேறு ஒருநாளில் நடத்திக்கொள்ளலாம் என பிசிசிஐ கூறியிருப்பதாக தெரிகிறது. ஆனால் அதற்கு சாத்தியம் இல்லை என இங்கிலாந்து தரப்பு கூறி வருகிறது. இதனால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

ஐசிசி கடிதம்
இந்நிலையில் இந்த பஞ்சாயத்து குறித்து விசாரணை நடத்த ஐசிசி-க்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் 5வது போட்டியின் வெற்றியாளர் யார் என்பதை முடிவு செய்ய வேண்டும். அதன் விசாரணையை உடனே தொடங்க வேண்டும் எனக்கோரப்பட்டுள்ளது.

இரு அணிகளின் வாதம்
இந்திய அணி இந்த தொடரில் 2 - 1 என முன்னிலை வகிக்கிறது எனவே இந்திய அணி தான் தொடரின் வெற்றியாளர் என ஒருபுறம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. மற்றொரு புறம் இந்தியா தாமாக முன்வந்து ஆட்டத்தை ரத்து செய்ததால் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக கூறி 2 - 2 என தொடர் சமனில் முடிவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழிவாங்கும் வீரர்கள்
இந்த விவகாரத்தில் இரு அணிகளுக்கு இடையேயும் பணிப்போர் போன்று நிலவி வருகிறது. இந்திய அணி பயோ பபுள் விதிமுறைகளை மீறி வெளியே சென்றதால் தான் இவ்வளவு பிரச்னை ஏற்பட்டுள்ளது. எனவே அவர்கள் நடத்தும் ஐபிஎல் தொடரில் பங்கேற்க போவதில்லை எனக்கூறி இங்கிலாந்து வீரர்கள் ஜானி பேர்ஸ்டோ, கிறிஸ் வோக்ஸ், டேவிட் மாலன் ஆகியோர் அறிவித்துவிட்டனர். இதனால் ஐபிஎல் அணிகளுக்கு திடீர் தலைவலி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











