லக்னோ : இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் உலகக்கோப்பை லீக் போட்டியில் வென்றால் தான் இங்கிலாந்து அணி பல சிக்கல்களில் இருந்து மீள முடியும்.
2023 உலகக்கோப்பை தொடருக்கு வரும் போது மிகவும் பலமான அணியாக அறியப்பட்டது இங்கிலாந்து அணி. அனைத்து வீரர்களும் நல்ல ஃபார்மில் இருந்தார்கள்.

அந்த அணி தன் அதிரடி ஆட்டம் ஆடும் வியூகத்தால் அனைத்து அணிகளையும் வீழ்த்தி உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என முன்னாள் வீரர்கள் பலரும் கூறி வந்தனர். ஆனால், அந்த அணி தற்போது புள்ளிப் பட்டியலில் கடைசியில் இருக்கிறது.
லீக் சுற்றில் ஐந்து போட்டிகளில் ஆடி, அதில் நான்கு போட்டிகளில் இங்கிலாந்து னி தோல்வி அடைந்துள்ளது. இந்த நிலையில், ஆறாவதாக இந்தியாவை சந்திக்க உள்ளது. இனி இங்கிலாந்து அணியால் அரை இறுதிக்கு முன்னேறவே முடியாது. அதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு.
இந்த நிலையில், இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றாலும் கூட இங்கிலாந்து அணிக்கு அதனால் இந்த உலகக்கோப்பையில் எந்த லாபமும் இல்லை. ஆனால், அதே சமயம், இங்கிலாந்து அணி மீது கடும் விமர்சனம் எழத் துவங்கி இருக்கிறது. 2019 உலகக்கோப்பை வென்றதால் இங்கிலாந்து நாட்டில் அந்த அணி மீது பெரிய மரியாதை இருந்தது. ஆனால், தற்போது அந்த நிலை மாறி இருக்கிறது.
2023 உலகக்கோப்பையை வெல்லாவிட்டாலும் குறைந்த பட்சம் அரை இறுதி சுற்றுக்காவது அந்த அணி முன்னேறி இருக்க வேண்டும். ஒன்பது லீக் போட்டிகளில் ஐந்தில் தோல்வி அடைந்துள்ள இங்கிலாந்து அணி, இனி மீதமுள்ள நான்கு போட்டிகளில் வென்று தங்கள் அணியின் தன்னம்பிக்கையை மீட்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
தற்போது வரை உலகக்கோப்பை லீக் சுற்றில் தோல்வியே சந்திக்காமல் இருக்கும் இந்திய அணியை வீழ்த்தினால், இங்கிலாந்து அணி தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்க முடியும். மீதமுள்ள லீக் போட்டிகளை வெல்ல இது ஒரு நல்ல துவக்கமாகவும் இருக்கும்.
அடிபட்ட புலியாக இங்கிலாந்து அணி இந்தப் போட்டியில் வெறியுடன் ஆடும் என்பதால் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு கடும் சவால் காத்துக் கொண்டு இருக்கிறது.