ஹைதராபாத் : இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து வீரர்களின் மனநிலை பதற்றமாக இருப்பதாகவே தெரிகிறது. வலைப்பயிற்சியில் இங்கிலாந்து மூத்த வீரர்கள் கூட தடுமாறி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் பின்னணியில் 2023 உலகக்கோப்பை தோல்வி இருக்கலாம் என கருதப்படுகிறது.
2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி சாம்பியன் அணியாக காலடி எடுத்து வைத்தது. ஆனால், கத்துக்குட்டி அணிகளான நெதர்லாந்து, ஆப்கானிஸ்தான் போன்ற அணிகளிடம் படுதோல்வி அடைந்து பரிதாபமாக காட்சி அளித்தது. அரை இறுதி செல்லும். கோப்பை வெல்லும் என்றெல்லாம் கூறப்பட்ட இங்கிலாந்து அணி ஏழாவது இடத்தை மட்டுமே பெற்றது.

இங்கிலாந்து அணியின் மோசமான செயல்பாட்டுக்கு முக்கிய காரணமாக கூறப்பட்டது இந்திய ஆடுகளங்கள் தான். இங்கிலாந்து வீரர்களால் இந்திய ஆடுகளங்களை புரிந்து கொள்ள முடியவில்லை எனவும், அவர்களின் அதிரடி ஆட்டம் ஆடும் பாணி இந்திய ஆடுகளங்களில் நடைமுறையில் சாத்தியமில்லை எனவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், அந்த அணி இந்திய மண்ணில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க வந்துள்ளது. டெஸ்ட் தொடருக்கு முன் இந்தியாவில் இருந்து பயிற்சி செய்யாமல், துபாயில் தங்கி பயிற்சி செய்தது இங்கிலாந்து அணி. இந்த நிலையில், முதல் டெஸ்ட் போட்டிக்கு மூன்று நாட்கள் முன்னதாக இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி வீரர்கள் வலைப் பயிற்சியில் சுழற் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறி வருவதாக கூறப்படுகிறது.
இங்கிலாந்து அணியின் முதன்மை டெஸ்ட் பேட்ஸ்மேன் ஜோ ரூட் கூட இடது கை சுழற் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் திணறியதாக அவருக்கு பந்து வீசிய உள்ளூர் வீரர் ஒருவர் பேட்டி அளித்து இருக்கிறார். இங்கிலாந்து வீரர்கள் இந்தியா என்றதுமே உலகக்கோப்பை தோல்வியை எண்ணி பயத்தில் இருப்பதாக தெரிகிறது. முதல் டெஸ்ட்டில் கொஞ்சம் ரன்கள் குவித்தால் மட்டுமே அவர்களின் பயம் அகலும். ஆனால், அது நடக்குமா? இந்திய சுழற் பந்துவீச்சாளர்கள் அதை அனுமதிப்பார்களா?